தாலி கட்டுவதற்கு முன் போலீசுக்கு கால் செய்து கெஞ்சிய திருப்பூர் பெண்: திருமணத்தை நிறுத்திய பொலிஸார்: கேரளாவில் பரபரப்பு..!
Tiruppur woman calls off wedding because she doesnt like groom before tying the thali
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மறையூர் அருகே உள்ள மேலாடி பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய கூலித்தொழிலாளிக்கும், தமிழகத்தில் திருப்பூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுடன் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துள்ளது.
இவர்களது திருமணம் கேரளாவில் மாப்பிள்ளை வீட்டில் நடக்கவிருந்த நிலையில், இதற்கு முந்தையநாள் நிச்சயதார்த்தத்துக்காக பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றுள்ளனர். நிச்சயதார்த்தம் முடிந்து மறுநாள், மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் திருமண மணமேடைக்கு வந்துள்ளனர். அப்போது தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில், மணப்பெண் திடீரென மறையூர் போலீசாரை தனது செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, தனக்கு திருமணம் செய்து கொள்வதற்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்றும், தனது விருப்பத்துக்கு மாறாக திருமணம் நடைபெறுவதாகவும், உடனடியாக திருமணத்தை நிறுத்துமாறும் போலீசாரிடம் கெஞ்சியுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை செய்ததோடு, திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதனைக்கேட்ட மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது, இது தொடர்பாக இரு வீட்டாரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியத்தில் திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும், இரு குடும்பத்தாரையும் சமாதானமாக பிரிந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து பெண் வீட்டார் அங்கிருந்து கிளம்பியதோடு, மாப்பிள்ளை வீட்டாரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.இதனால், திருமணத்திற்காக ஏற்பாடு செய்த உணவு பயன்படுத்தாமல் வீணாகியுள்ளது. தாலி காட்டும் சில நிமிடங்களில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கூறி மணமேடையிலேயே திருமணத்தை நிறுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Tiruppur woman calls off wedding because she doesnt like groom before tying the thali