சாலையின் 'சென்டர் மீடியனில்' கொடிக்கம்பங்கள்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படும்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை..!
The High Court is unhappy with the Tamil Nadu government for not removing flagpoles in the center median of the road
தமிழகம் முழுதும் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசின் இதர துறைகளுக்கு சொந்தமான, பொது இடங்களில், அரசியல் கட்சிகள், ஜாதி, மதம் சார்ந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்கள் உள்ளன.
இவற்றை கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், இதை அமல்படுத்தியது குறித்து, அறிக்கை தாக்கல் செய்வதற்காக, இந்த வழக்கு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், இன்று (நவம்பர் 12) விசாரணைக்கு வந்தது.

இதன் போது தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி கூறியதாவது: ''அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்காக, தற்காலிகமாக கொடிக் கம்பங்கள் அமைப்பது தொடர்பாக நிலையான வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன,'' என்று தெரிவித்தார்.
வாதத்தின் இடையில் குறுக்கிட்ட நீதிபதி, ''அரசின் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது தான். ஆனால், சாலைகளின் சென்டர் மீடியன்களில் கொடிக்கம்பங்கள் அமைக்கக் கூடாது என, உத்தரவு பிறப்பித்தும், சென்டர் மீடியன்களில், அனைத்து கட்சிகளும் கொடிகம்பங்கள் அமைக்க அனுமதிக்கப்படுகின்றன. அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. உதாரணமாக, சென்னை அண்ணா மேம்பாலத்தில், ஆளுங்கட்சி கொடி கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது குறித்த வீடியோ காட்சிகள் என்னிடம் உள்ளன,'' என்று தெரிவித்தார்.

இந்த வழக்கின் போது அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் அமைத்தவர்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கப்படும் என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 'இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்படும்' என, நீதிபதி எச்சரிகை விடுத்தார்.
அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், அனுமதியின்றி வைக்கப்பட்ட கொடிக்கம்பங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கோரப்பட்டு உள்ளதாகவும், அதை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
English Summary
The High Court is unhappy with the Tamil Nadu government for not removing flagpoles in the center median of the road