துல்ஹஜ் பிறை தென்படவில்லை; மே 28 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்; தமிழ்நாடு தலைமை காஜி அறிவிப்பு..!
The Chief Kazi of Tamil Nadu announces that the Bakrid festival will be celebrated on May 28th
இன்று மாலை துல்ஹஜ் பிறை தென்படாததன் காரணமாக வரும் செவ்வாய்க்கிழமை துல்ஹஜ் மாதம் தொடங்கும் நிலையில் மே 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி முப்தி உஸ்மான் முஹ்யித்தீன் பாகவி அறிவித்துள்ளார்.
பக்ரீத் பண்டிகை (ஈத்-உல்-அதா) என்பது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் இரண்டு முக்கிய பெருநாட்களில் இரண்டாவது பெருநாளாகும். இதனை தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் என்று இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள்.
இவ்விழா இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாகத்தை நினைவுகூரும் விதமாகவே இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இறைவனின் கட்டளையை ஏற்று, தனது அன்பிற்குரிய மகன் இஸ்மாயீல் அவர்களை இறைவனுக்காக தியாகம் செய்ய இப்ராஹீம் துணிந்தார்.

அவர்களின் இந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும் தியாக உள்ளத்தையும் ஏற்றுக்கொண்டு, இறைவன் ஒரு ஆட்டை வழங்கி மகனைக் காப்பாற்றினார் என்று இஸ்லாமியர்களால் நம்பப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அர்ப்பணிப்பை நினைவு படுத்தும் விதமாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த புனித நாளில் முஸ்லிம்கள் ஆடுகள், ஒட்டகம் அல்லது மாடுகளை அறுத்து பலியிட்டு வணக்கத்தை செலுத்துகின்றனர். அத்துடன், இந்த இறைச்சியை மூன்று பங்குகளாக பிரிக்கப்பட்டு ஒரு பங்கு ஏழைகளுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் இன்னொரு பங்கு தங்களுக்கும் முஸ்லிம்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.
English Summary
The Chief Kazi of Tamil Nadu announces that the Bakrid festival will be celebrated on May 28th