#Breaking: எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்பட முடியாது.. முதல்வர் பரபரப்பு பேச்சு.!
Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet Cudallore 26 November 2020
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூரில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், " புயலால் ஒருவிதமான பதற்றத்திலேயே நாம் இருந்தோம். இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பின் படி, புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுத்தப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையிலேயே, கடலூரில் அதிக சேதம் இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியருக்கு தமிழக தலைமை செயலர், முதல்வர் ஆகிய நான், அமைச்சர்கள், காவல் உயர் அதிகாரிகள் தொடர்பு கொண்டு அறிவுரை வழங்கினார்கள். சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயகுமார் தங்கியிருந்து பணியாற்றியுள்ளார்.
அரசின் தீவிர முயற்சியால் புயலால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படவில்லை. தமிழக அரசு சார்பாக ஏற்படுத்தப்பட்ட 4 ஆயிரம் நிவாரண முகாம்களில், 2 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கியிருந்தனர். கடலூரில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்த 58 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
புயலால் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டு இருந்த 77 மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டு, மின் இணைப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 322 சேதமடைந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விளைபொருட்கள் சேதமடைந்தது குறித்த விபரம் அளித்ததும், நிவாரண வழங்கப்படும். பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்தவர்களுக்கு, இழப்பீடு தொகை வழங்கப்படும்.
சேத விபரங்கள் கணக்கிட்ட பின்னர், மத்திய அரசுக்கு தேவையான நிதி குறித்து கோரிக்கை வைக்கப்படும். புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது. புயல் கடந்து சென்றதும், மின்னிணைப்பு செலுத்தினால் பிரச்சனை இல்லை என்ற பட்சத்திலேயே, மின்சார இணைப்பு கொடுக்கப்படும். மக்களின் உயிர் முக்கியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மின்னிணைப்பை கொடுக்க முடியாது.
மின்சாரம் மிகவும் ஆபத்தானது. மின்சாரம் விவகாரத்தில் அரசு அலட்சியத்துடன் இருக்காது. மக்களின் உயிரே எங்களுக்கு முக்கியம். உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்திலேயே, மின்னிணைப்பு வழங்கப்படும். புயலில் இருந்து மக்களை காப்பாற்றுவதே அரசின் கடமை " என்று தெரிவித்தார்.
Tamil online news Today News in Tamil
English Summary
Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet Cudallore 26 November 2020