இனிப்பு கொடுத்த அதிர்ச்சி...! பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்ட 21 பள்ளி மாணவர்களுக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட வாந்தி, மயக்கம்...! காரணம் என்ன...?
sweet surprise 21 schoolchildren vomited and fainted after eating birthday chocolate What reason
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் நடந்த எதிர்பாராத சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வழங்கப்பட்ட சாக்லேட் சாப்பிட்ட 21 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள சக்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை 6-ம் வகுப்பில் பயிலும் மாணவி ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு மகிழ்ச்சியுடன் சக மாணவ, மாணவிகளுக்கு சாக்லேட்கள் வழங்கினார்.சாக்லேட்டை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே 11 மாணவிகள் மற்றும் 10 மாணவர்கள் என மொத்தம் 21 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு தலைமை மருத்துவர் பாலகோபால் மேற்பார்வையில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர் பதற்றத்துடன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தைகளின் உடல்நிலையை அறிந்து கவலையில் ஆழ்ந்தனர்.இதையடுத்து சம்பவம் குறித்து தகவலறிந்த காவலர்கள் மற்றும் உதவி கல்வி அலுவலர் வெங்கடேசன் மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ஆரம்பகட்ட விசாரணையில் காலாவதியான சாக்லேட்டை சாப்பிட்டதாலேயே மாணவர்களுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார், செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் மற்றும் பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களை பார்வையிட்டனர்.
மேலும் மாணவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவர்களிடம் அறிவுறுத்தினர்.பள்ளி வளாகத்தில் நடந்த இந்த திடீர் சம்பவம் செஞ்சி பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
sweet surprise 21 schoolchildren vomited and fainted after eating birthday chocolate What reason