ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்க துறை உதவி இயக்குநர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!
Sudden twist in Akash Bhaskaran case High Court orders Enforcement Directorate Assistant Director to appear in person
சென்னை உயர் நீதிமன்றம், சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அமலாக்கத்துறை (ED) உதவி இயக்குநர் செப்டம்பர் 17 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கின் பின்னணி:
கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை டாஸ்மாக் அலுவலகத்திலும், அதனைச் சுற்றிய அரசியல் மற்றும் தொழில் நபர்களின் இடங்களிலும் சோதனை நடத்தியது. அதன்போது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர்கள் விக்ரம், ரவீந்திரன் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சில இடங்கள் சீல் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நடவடிக்கை திமுகவுடன் தொடர்புடையவர்களை குறிவைத்து நடத்தப்பட்டது என அரசியல் வட்டாரங்களில் சர்ச்சை எழுந்தது.
பின்னர், ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர்கள் விக்ரம், ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில், நீதிமன்றம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்க வேண்டும் என்றும், அவர்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
ஆனால், அமலாக்கத்துறை அந்த உத்தரவை செயல்படுத்தாமல், ஆகாஷ் பாஸ்கரனுக்கு ஆவணங்கள் தொடர்பாக புதிய நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை உத்தரவை மதிக்கவில்லை என கண்டித்து, உதவி இயக்குநர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
English Summary
Sudden twist in Akash Bhaskaran case High Court orders Enforcement Directorate Assistant Director to appear in person