விசித்திரக் கடத்தல்! இலங்கைக்கு அனுப்பத் தயாரான ரூ.5 லட்சம் மதிப்புள்ள சோப்புகள் பறிமுதல்...!
Strange smuggling Soaps worth 5 lakhs ready sent Sri Lanka seized
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகம் வழியாக இலங்கைக்கு சட்டவிரோதமாக பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவல், பாதுகாப்பு அமைப்புகளை பரபரப்பில் ஆழ்த்தியது. இதையடுத்து க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையிலான காவலர்கள் நேற்று இரவு திரேஸ்புரம் கடலோரப் பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இரவு சுமார் 9.15 மணியளவில், திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வாடை கரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான அசைவுகள் கவனிக்கப்பட்டன. ஒரு அதிவேக ஃபைபர் படகில் சிலர் அவசர அவசரமாக அட்டைப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டிருந்தனர்.
காவலர்கள் சம்பவ இடத்தை நோக்கி விரைந்ததை உணர்ந்த அந்த நபர்கள், இருளை சாதகமாக பயன்படுத்தி கடற்கரைப் பகுதியிலிருந்து தப்பிச் சென்றனர்.இதையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பதிவு எண்கள் ஏதுமின்றி இரட்டை இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்த அதிவேக ஃபைபர் படகு கைப்பற்றப்பட்டது.
மேலும், படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 அட்டைப் பெட்டிகள் சோதனை செய்யப்பட்டபோது, அவற்றில் இருந்து 1200 “நேச்சர் பவர் பப்பாளி சோப்”கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைப்பற்றப்பட்ட சோப்புகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் வரை இருக்கும் என காவல்துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கடத்தல் முயற்சியின் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார்? இலங்கையில் யாருக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது? என்பன குறித்து தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தப்பியோடிய கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் பொருட்கள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Strange smuggling Soaps worth 5 lakhs ready sent Sri Lanka seized