குலசை தசரா திருவிழா - சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு.!!
special bus run to kulasekarapattinam for dhasara festival
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத்திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்தத் திருவிழா வருகிற 4-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடங்களில் போக்குவரத்து வசதிகள், வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள், தற்காலிக பேருந்து நிறுத்தம், குடிநீர் வசதி, மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக 350 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், வருகிற 2-ந் தேதியும், 3-ந் தேதியும் பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நாட்களில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில், ஏராளமான குடிநீர் தொட்டிகளும், சுகாதார வளாகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை பராமரிக்க போதிய தூய்மைப்பணியாளர்கள் நியமிக்கப்படுவர். சுகாதாரத்துறை சார்பாக 3 மருத்துவ குழுவினர் 24மணி நேரமும் பணியில் இருப்பர். இதுதவிர நடமாடும் மருத்துவ குழுவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
special bus run to kulasekarapattinam for dhasara festival