வடகிழக்கு பருவமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்! விவசாயிகள் வேதனை!
Rice crops submerged in water due to rain
வடகிழக்கு பருவமழை தற்பொழுது டெல்டா மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் நெல் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி தற்பொழுது வரை கனமழை பெய்து வருகிறது. நேற்று பெய்த கனமழையால் சீர்காழி தாலுக்கா மருதங்குடி, அலஞ்சேரி, தென்னாம்பட்டினம், திருப்பத்தூர், மங்கை மேடம், பெருந்தோட்டம் ஆகிய பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்டு இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தொடர் மழையின் காரணமாக வயல்களில் இரண்டு அடிகளுக்கு மேல் மழை நீர் தேங்கியுள்ளதால் தண்ணீர் வடிவதில் சிக்கல் உண்டாகியுள்ளது. சம்பான் வகை நெற்பயிர்கள் நடவு செய்து 14 நாட்களே ஆன நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் மழை தொடர்கிறது. இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று திருவாரூர் மாவட்டம் நல்லினம், மன்னார்குடி, நீடாமங்கலம், குடவாசல் பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதேபோன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக சடச்சுபட்டி ஓடை முறையாக பராமரிக்காததால் உடைப்பு ஏற்பட்டு நெல் வாயில்களை தண்ணீர் தேங்கியுள்ளது.
விவசாயிகள் ஏக்கருக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்து நடவு செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். பயிர் காப்பீடு திட்ட தொகை சரிவர வழங்காத காரணத்தால் ஏற்கனவே நஷ்டத்தில் உள்ள விவசாயிகள் தொடர் பருவ மழை காரணமாக பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயம் தொடர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து மீண்டும் சாகுபடி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Rice crops submerged in water due to rain