குடிசைவீடு தீ வைத்து எரிப்பு..மர்ம நபர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்!
Public blocked the road demanding the arrest of mysterious individuals for the burning of a hut
புதுமாவிலங்கை கிராமத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீட்டு வாசலில் வீசி இரண்டு குடிசை வீட்டுக்கு தீ வைத்து எரித்த மர்ம நபர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுமாவிலங்கை பகுதியைச் சேர்ந்தவர் தனசிங்,(30) இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் இப்பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே மது அருந்திவிட்டு கோவிலின் சுற்றுச்சுவரை சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கடம்பத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது தனசிங் தப்பித்து தலைமறைவானார். இந்நிலையில் தனசிங் குடிபோதையில் அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து பகுதிவாசிகள் கொடுத்த புகாரின்படி கடம்பத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் இப்பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது வீட்டின் முன்பு பீர் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி வீட்டு வாசலில் அடித்து விட்டு சென்று குடிசை வீட்டை தீ வைத்து எரித்தனர். இதில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான விவசாய பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இதேபோல் பார்த்திபன் என்பவரது குடிசை வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக குடிசை வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சரவணனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று நள்ளிரவில் கடம்பத்துார் – பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தி்ல ஈடுபட்டனர். இதனால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் மற்றும் கடம்பத்துார் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி குடிசைக்கு தீ வைத்த நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது. பேரம்பாக்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி குடிசைக்கு தீ வைத்த சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Public blocked the road demanding the arrest of mysterious individuals for the burning of a hut