பேரறிஞர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாட வேண்டும் - டாக்டர் இராமதாஸ் கோரிக்கை! - Seithipunal
Seithipunal


பா.ம.க. நிறுவனர் – தலைவர் மருத்துவர் இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய அளவிலான இட ஒதுக்கீட்டு நாயகன் வேம்பாயி பூவாயி திருமகன் பேரறிஞர் வே.ஆனைமுத்து அவர்களின் நூறாவது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாடி அவருக்கு புகழ் சேர்க்க வேண்டுகிறேன்.

பேரறிஞர் வே. ஆனைமுத்து அவர்கள் திருச்சி மாவட்டம்,பெரம்பலூர் வட்டம், சிறுமாத்தூரைச் சார்ந்த முருக்கன் குடியில் வேம்பாயி என்னும் தந்தைக்கும், பூவாயி என்னும் தாயாருக்கும் மகனாக 21.6.1924ல் பிறந்தார். 

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்  Intermediate என்னும் இடைநிலைக் கல்வி வரை பயின்றார். கடலூர் சந்தைக்குழு (வேர்க்கடலை மார்க்கெட்- Marketing Committee) எழுத்தராக   சேர்ந்து சில ஆண்டுகள் பணியாற்றினார்.

22.8.1954 ஆம் ஆண்டில் சுசிலா என்னும் அம்மையாரைத் திருமணம்  செய்துகொண்டார். இவர்களின் சுயமரியாதைத் திருமணம் தமிழறிஞர் வை. பொன்னம்பலனார் அவர்களின் தலைமையில், தமிழக அமைச்சர் ஆ. கோவிந்தசாமி அவர்களின்  முன்னிலையில் நடைபெற்றது.

சுசிலா அம்மையார் ஏ. சுப்பிரமணியனின் மகள் மற்றும் அவரது தம்பி ஏ. கோவிந்தசாமியின் வளர்ப்பு மகளும் ஆவார்.  அவர்களது பூர்விகம் புதுச்சேரிப் பகுதிதேங்காய்த்திட்டு ஆகும்.

ஆனைமுத்து-சுசிலா இணையருக்கு ஆண்கள்-4, பெண்கள்-3 என ஏழு பிள்ளைகள் பிறந்தார்கள். தமிழ்ச்செல்வி, பன்னீர்செல்வம், அருட்செல்வி, வெற்றி, வீரமணி, அருள்மொழி, கோவேந்தன் என அனைவர்க்கும் தூய தமிழ்ப் பெயர்கள் சூட்டினார்கள்.

வன்னியர் சங்கம் அமைத்து மாநாடுகள் நடத்திச் சமூகப்பணிகளிலும், பொதுப்பணிகளிலும் அதிகம் நாட்டங்கொண்டிருந்த ஆனைமுத்து அவர்கள் பெரியாரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு அவரது கொள்கைவழி  நடக்கலானார். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்குப்  பாடுபட்டார். வேலையினின்று தன்னை விடுவித்துக்கொண்டு முழுமையாக பெரியாரின் செயல்பாட்டாளர் ஆனார்.

திருச்சியில் பாவேந்தர் பெயரில் அச்சுக்கூடம் தொடங்கினார்; இதனைத் தந்தை பெரியார் தொடங்கி வைத்தார். "தந்தை பெரியார் ஆசிரியர் பயிற்சிப்  பள்ளி" நடத்தினார். குறள்முரசு, PERIYAR ERA, சிந்தனையாளன், முதலான ஏடுகள் நடத்தினார். தொல்காப்பியம், திருக்குறள், சங்ககால இலக்கியங்கள் போன்ற தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றார்.

வள்ளலார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆகியோரின் சீர்திருத்தக் கொள்கைகளில் பற்றுக்கொண்டிருந்தார்.

"திருச்சி வே. ஆனைமுத்து கருத்துக் கருவூலம்" என்னும் 15 நூல்கள், பெரியாரியல் நூல்கள் என ஏராளமான நூல்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார். அனைத்து நூல்களும் வரலாறுகள், அரசியல் அமைப்புச் சட்டங்கள், ஆய்வுகள், இலக்கிய நுகர்வுகள் கொண்டவை ஆகும். தனித்தமிழில் பற்றுடைய ஆனைமுத்து அவர்கள் ஆங்கிலத்திலும் தனித்திறன் கொண்ட எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கினார்.

"சிந்தனையாளர் கழகம்", " பெரியார் சம உரிமைக் கழகம்", "பெரியார் ஈ. வெ. இராமசாமி-நாகம்மை கல்வி-ஆராய்ச்சி அறக்கட்டளை" நிறுவினார்.


.
இந்தியாவில் சமத்துவம் நிலவிட வேண்டுமாயின் மார்க்சியக் கொள்கைகளையும், பெரியாரியக் கொள்கைகளையும் இணைத்துச் செயல்பட்டால் மட்டுமே முடியும் என தமது தோழர்களுடன் "மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி" நிறுவினார். வடமாநிலத் தலைவர்களுடன் இணைந்து "அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைச் சாதியினர், சிறுபான்மையினர் பேரவை" உருவாக்கப்பட்டது.

பெரியார் சிந்தனைகள்:

பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகளை மூன்று தொகுப்புகளாக நூல்களாக்கி  1.7.1974 ல் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் வெளியிடச்செய்த ஆனைமுத்து அவர்கள், அதே தொகுப்புகளை விரிவாக்கி 9,000 பக்கங்களுடன்  20 தொகுப்புகளாக  15.12.2009 ல் வெளியிட்டார்.

பெரியார் நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டார். சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஒன்றரை ஆண்டு கடுங்காவல் தண்டனைப்  பெற்று,  சிறையில் இருந்தார்.

இடைநிலைக் கல்விவரை மட்டுமே பயின்ற ஆனைமுத்து அவர்கள் தாமே கற்றல் திறனால் தமிழ், ஆங்கில மொழிகளில் புலமைப் பெற்றார். இலக்கியங்கள், வரலாறுகள், சட்டங்கள் போன்றவற்றை ஆய்ந்தறிந்து கற்றார். குறிப்பாக இந்திய அரசமைப்பு, அரசியல் சட்டங்களைத் தெளிவாகக் கற்றார். பிறநாட்டுச் சட்டங்களை அறிவதற்கும், பெரியாரின் அயல்நாட்டுப் பயணங்களை ஆய்ந்திட வும் வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தார்.

இலங்கைக்குச் சென்று தமிழீழம் பற்றிய புரிதல்களுடன், "தமிழீழத் தமிழரை இலங்கை மலையகத் தமிழரை நீங்களும் பாருங்கள்! நீங்களும் பேசுங்கள்!!" என்னும் நூல். எழுதினார். பிற நாட்டுச் சட்டங்களையும் நுட்பமாக இந்தியச் சட்டங்களுடன் பெரியாரே வியந்திட ஒப்பாய்வுச் செய்தார்.

இந்தியாவின் இடப்பங்கீட்டுக் கொள்கைகளை ஆழமாகவும், நுட்பமாகவும் ஆய்வு செய்த ஆனைமுத்து அவர்கள் இந்தியா முழுமைக்கும் சென்று அந்தக் கொள்கைகளை வட-தென் மாநிலங்களின் தலைவர்களுடன் இணைந்து முன்னெடுத்து வெற்றிக்கண்டார்.

இட ஒதுக்கீட்டு வரலாற்றில் அகில இந்திய அளவில் இடம்பெற்றவர் பேரறிஞர் வே. ஆனைமுத்து. வகுப்புவாரியாக விகிதாச்சாரப் பங்கீட்டை முதன்மையாக வலியுறுத்தினார். மத்திய அரசில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று கோரும் கொள்கையை முதன்முதல் 1976ஆம் ஆண்டில் வெளியிட்டார். பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கேட்டு இந்தியாவின் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் போராடியிருந்தாலும் 1978ஆம் ஆண்டு தொடங்கி 2012ஆம் ஆண்டுவரை 34 ஆண்டுகள் கடுமையாக உழைத்தவர் வே. ஆனைமுத்து அவர்கள் மட்டுமே

தொடர்ந்து 5 ஆண்டுகள் வடமாநிலங்களிலேயே தங்கி இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகநீதித் தலைவர்கள், குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்றங்களின் இரு அவை உறுப்பினர்கள் முதலானவர்களைச் சந்தித்து வலியுறுத்தினார். மத்திய அரசின் கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்குத் தனி இட ஒதுக்கீடு அளிப்பதற்குண்டான உரிமைகளை இந்திய அரசமைப்புச் சட்டங்களில்  டாக்டர் அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டிருப்பதை எடுத்துக்கூறி விளக்கம் அளித்தார். 16 பக்கங்களில் இந்தியிலும் ஆங்கிலத்திலும்  தாமே அச்சிட்ட சிறு நூல்களை மக்களவை மற்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 761 பேர்களுக்கும் அளித்தார். பாராளுமன்றத்தின் அரசமைப்பு கிளப்பில் இரண்டு முறை எம்பிக்களின் கூட்டம் நடத்தினார்.

இராம் அவதேஷ்சிங் போன்ற தலைவர்களுடன் இணைந்து தலைநகர் புதுதில்லி, உத்தரப்பிரதேசம், பீகார், அசாம், பஞ்சாப், அரியான, முதலான மாநிலங்களில் பொதுக்கூட்டங்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள், ஊர்வலங்கள் நடத்தினார். உடன் பெரியாரியல் கொள்கைகளையும் பேசினார். பிரதமர்கள் மொரார்ஜி தேசாய், இந்திராகாந்தி, வி. பி. சிங் முதலானவர்களைச் சந்தித்து விவாதித்தார்.

வே. ஆனைமுத்து அவர்கள் முன்னெடுத்தப் போராட்டங்களால் பி. பி. மண்டல் குழு அமைக்கப்பட்டது. 26.8.1990 ஆம் ஆண்டில் மண்டல் குழு பரிந்துரை அமலாக்கப்படும் என்று பிரதமர் வி. பி. சிங் அறிவித்தார்.

பீகாரில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன்முதல் 20% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதில் வே. ஆனைமுத்து அவர்களின் பெரும்பங்கு உண்டு.

தமிழ்நாடு:

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க அரசியல் சட்ட விதி 16(4) எதிரானது அல்ல என்று விளக்கம் கூறி 50% ஒதுக்கீடு செய்வதற்கு வழிகாட்டினார்.

அதேபோன்று புதுச்சேரிப் பிரதேசம் ஓர் யூனியன் என்பதால், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைப்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின்படித் தகுதி இல்லை என்று இந்திய குடிமைப்பணி ஆட்சிப் பணியாளர்கள் (I.A.S.) தொடர்ந்து மறுத்து வந்தார்கள். இந்நிலையில் பெரியாரியல் அறிஞரும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் - இட ஒதுக்கீட்டுச் சட்டங்களிலும் வல்லுநருமான  பெரியாரால் "பேரறிஞர் ஆனைமுத்து" என சிறப்பித்து அழைக்கப்பட்டவரும் ஆகிய திருச்சி வே. ஆனைமுத்து அவர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு அப்போது புதுச்சேரியின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ஆர். விசுவநாதன் அவர்கள் கருதினார். புதுச்சேரி சமூகநீதிப் பேரவையின் துணையுடன் வே. ஆனைமுத்து அவர்களை புதுச்சேரிக்கு வரவழைத்தார். அதிகாரிகளிடையே பேசச்செய்தார். வே. ஆனைமுத்து அவர்கள் கூறிய சட்ட ஆலோசனைகளை அதிகாரிகள் ஒப்புக்கொண்ட நிலையில் 1996 ல் ஆர். வி. ஜானகிராமன் முதலமைச்சராக இருந்தபோது ஆணையம் அமைக்கத் தீர்மானம் நிறைவேறியது. 1998 ல் முதலாவது ஆணையம் நீதிபதி தங்கமணி அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டது.

இந்த அளவில் பொதுவாழ்க்கைக்கே தம்மை ஒப்படைத்துக்கொண்ட வே. ஆனைமுத்து அவர்கள் தனது குடும்பத்தை வறுமையிலேயே வைத்திருந்தார். தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை உற்ற, கற்றறிந்த தோழர்களை இணைத்துக் கொண்டு. இறுதி வரை உறுதியாக நின்று வென்று காட்டினார்.

28.10.1944 ல் பெரியாரைப் பார்த்த ஆனைமுத்து 13.4.1954 லிருந்து 28.11.1973 வரை 20 ஆண்டுகள் தொடர்ந்து பெரியாரின் இறுதிக் காலம் வரை அவருடன் பயணித்தார்.

பேரறிஞர் ஆனைமுத்து:

"இந்துச் சட்டம் மூலங்கள் அல்லது பண்டிதர்களின் கருத்துரைகள்" (Elements of Hindu law or Ordinations of Pundits), மற்றும் மெய்னி, டி. எஃப்.முல்லா முதலானோரின்  இந்துச் சட்டங்கள், அரசமைப்பு விதிகள் ஆகியவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து, அடுக்கடுக்கான ஆதாரங்களோடு, பெரியாரின் கருத்துச் செழுமைகளையும் விரிவாக, விளக்கமாகப் பெரியார் முன்னிலையில் 1.1/2  மணி நேரத்துக்கும் மேலாக, 1973-நவம்பர் இறுதியில் சேலம் பொதுக்கூட்டக்தில் வே. ஆனைமுத்துப் பேசினார். அதனைப் பார்த்து, கேட்டு வியந்த போன பெரியார் அவர்கள் ஆனைமுத்து அவர்களைப் "பேரறிஞர் ஆனைமுத்து" என்னும் உயரிய அடை மொழியால் அழைத்தார்.

வே. ஆனைமுத்து அவர்கள்  பெரியாரின் இறுதிக் காலம்வரை அவருடன் 20 ஆண்டுகள் பெரும் பணியாற்றிப் பெரியாரியச் சிந்தனைகளைத் தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமன்றி இந்தியா முழுவதும் பரவல் செய்தார். குறிப்பாக பெரியாரின் சமூக நீதியின் "சஞ்சீவி" என்னும் மா மருந்து ஆகிய "வகுப்புவாரி விகிதாச்சார இடப்பங்கீடு" என்னும் கொள்கையைக் கொண்டு சென்றார்.

இன்னனம் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட இந்தியா முழுவதற்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசிலும், மாநில அரசிலும் இட ஒதுக்கீடு கிடைப்பதற்குத் தனது அரசியல் சட்ட அறிவையும் கடின உழைப்பையும்  நல்கியப் பேரறிஞர் வே. ஆனைமுத்து அவர்கள் 96 வயதில் 6.4.2024 ல் புதுச்சேரியில் தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டார்.

பேரறிஞர் வே.ஆனைமுத்து அவர்களின் ஈகங்களுக்கு நன்றிக் கடனாக தமிழக அரசு அன்னாரது நூற்றாண்டை  முன்னிட்டு அவரது புகழைப் போற்றும் விதமாக, அரசு சார்பில் நூற்றாண்டு விழா எடுத்துச் சிறப்பிக்க வேண்டுகிறேன்" என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PMK Ramadoss say Aanaimuthu 10th birth day TN Govt


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->