பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் – மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு..!
People protest tomorrow on behalf MNM the increase in petrol and diesel prices
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள் நீதி மய்யம் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிப்பதாவது, தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையையும், மாநில அரசு உயர்த்திய சொத்து வரியையும் கண்டித்து, அத்துடன் பெண்கள் மீதான தொடர் பாலியல் வன்கொடுமைகளையும் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற உள்ளது.
நாளை (சனிக்கிழமை) சென்னை வள்ளூவர் கோட்டத்தில் காலை 10.30 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
கொரோனா காலத்தில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர் என்ற புள்ளி விவரங்களை தெரிவிக்கும் மத்திய அரசு, மக்கள் கொஞ்சம் வெளியே வரும்போது அவர்களின் அன்றாட தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை ஏற்றி உள்ளது. தினம் மக்களின் மீது மேலும் மேலும் சுமையை ஏற்றுவது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது.
போதாகுறைக்கு இங்கு இருக்கும் மாநில அரசு தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது” என்று சொல்லி இப்போது மக்கள் மீது ஒரு பெரும் சுமையை தன் பங்கிற்கு ஏற்றியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டிப்பவர்கள் சொத்து வரி உயர்வை கண்டிப்பது இல்லை. அதே போல் சொத்து வரி உயர்வை கண்டிப்பவர்கள் பெட்ரோல், டீசல் விலை குறித்து மூச்சு விடுவதில்லை.
ஒரு சாமானியன் பக்கம் நின்று இரண்டையும் கண்டிக்கும் ஒரே கட்சியாக மக்கள் நீதி மய்யம் மட்டுமே உள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக தொடர்ச்சியாக குரல் எழுப்பும் கட்சியாகவும் மக்கள் நீதி மய்யம் மட்டுமே இருந்துவருகிறது இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
People protest tomorrow on behalf MNM the increase in petrol and diesel prices