சென்னை துறைமுகத்தில் பரபரப்பு: கேபின் உடைந்து கடலில் விழுந்த லாரி டிரைவர் உயிரிழப்பு...!
Panic Chennai port Lorry driver dies after his cabin breaks and falls into sea
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகிலுள்ள வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமாரியப்பன் (36). கன்டெய்னர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்த அவர், வழக்கம்போல் தூத்துக்குடி துறைமுகத்தில் சரக்கை இறக்கி விட்டு, அடுத்த கன்டெய்னரை ஏற்றிக்கொள்ள சென்னை துறைமுகத்துக்கு முன்தினம் அதிகாலை 3 மணியளவில் சென்றிருந்தார்.

அந்தமான் நோக்கி சரக்குகளை ஏற்றும் பகுதிக்குள் டிரெய்லர் லாரியை ஓட்டி சென்றபோது, எதிர்பாராத விதமாக முன்பகுதியில் இருந்த டிரைவர் கேபின் திடீரென உடைந்து பிரிந்தது. கணநேரத்தில் கேபினுடன் சேர்ந்து முத்துமாரியப்பன் கடலுக்குள் தலைகுப்புற விழுந்தார்.
இந்த சம்பவம் துறைமுகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.உடனடியாக தீயணைப்புத் துறைக்கும், துறைமுக காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார், தீயணைப்புப் படையினர் மற்றும் இந்திய கடற்படையின் டைவிங் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலுக்குள் மூழ்கிய டிரெய்லர் கேபின் மீட்கப்பட்ட நிலையில், நீண்ட தேடுதலுக்குப் பிறகு முத்துமாரியப்பனின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திடீர் விபத்தில் உயிரிழந்த இந்த சம்பவம் துறைமுகப் பணியாளர்களையும், லாரி ஓட்டுநர் சமூகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்து துறைமுக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
English Summary
Panic Chennai port Lorry driver dies after his cabin breaks and falls into sea