சான்றிதழ் பெற வரி கேட்கும் தமிழக அரசு - ஓபிஎஸ் கொந்தளிப்பு.!
ops say about Certificate tax
தமிழக அரசு வணிகவரித்துறை கடந்த மாதம் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிவிப்பு ஒன்றினை வழங்கியுள்ளதாக பத்திரிகைகளில் நேற்று செய்தி வந்துள்ளது.
ஒரு சான்றிதழுக்கு ரூ.1000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றால் ரூ.180 பொருட்கள், சேவை வரியாக ஒவ்வொரு மாணவ, மாணவியரும் கூடுதலாக செலுத்த வேண்டும்.அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் வணிகவரித் துறை அறிவிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக அண்ணா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ஆகியவை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென்பதே மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இல்லையெனில், 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிப்பிற்கு ஏற்ப தற்போது மாணவ, மாணவியரிடமிருந்து பல்வேறு சான்றிதழ்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்பதும், வரி என்ற போர்வையில் தற்போதுள்ள கட்டணத்திற்கு மேல் கூடுதலாக கட்டணத்தை கல்லூரிகள் வசூலிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதும், இது குறித்து வருகின்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் முறையிட்டு அதற்கு விதிவிலக்குப் பெற வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இந்த எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்கு உண்டு என்பதோடு, கல்விக்கு வரி என்பது எந்த வடிவத்தில் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிய தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, சான்றிதழ்களுக்கான 18 விழுக்காடு பொருட்கள் மற்றும் சேவைகள் வரி மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தலையில் விழாதவாறு நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்." என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
English Summary
ops say about Certificate tax