திருப்பூர் பேருந்தில் பெண்ணின் புதிய சாதனை ...! - அவிநாசி வழித்தடத்தில் கண்டக்டராக கோகிலா...!
New achievement women Tiruppur bus Kokila conductor Avinashi route
திருப்பூர் நகரிலிருந்து அவிநாசி வழியாக மொண்டிபாளையம் நோக்கி இயக்கப்படும் அரசு நகர பேருந்து (எண் 9-ஜே) கடந்த இரண்டு வாரங்களாக ஒரு புதிய மாற்றத்தை கண்டுள்ளது. அந்த பேருந்தில் கண்டக்டராக 32 வயதான கோகிலா பணியாற்றி வருகிறார்.
இதுவரை பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த இந்த வழித்தடத்தில், பெண் ஒருவர் தன்னம்பிக்கையுடன் கடமையாற்றுவது பயணிகளிடையே வியப்பையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பெண் பயணிகள் பலர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.தன்னுடைய பயணத்தைப் பற்றி கோகிலா கூறுகையில், “நான் எம்.ஏ. படித்துள்ளேன். என் தந்தை ராமலிங்கம் நம்பியூர் கிளையில் கண்டக்டராக பணியாற்றினார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் அவர் காலமானார். அதன் பின்னர் வாரிசு அடிப்படையில் இந்த வேலை எனக்கு கிடைத்தது. ஒரு மாத கால பயிற்சிக்குப் பிறகு இப்போது பணியை நம்பிக்கையுடன் செய்து வருகிறேன்.
இதுவரை எந்த சிக்கலும் இல்லை. மகிழ்ச்சியாகவே வேலை செய்கிறேன்” என்றார்.மேலும், “சாதிக்க வேண்டும் என்ற மன உறுதி இருந்தால் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லை; எந்தத் துறையிலும் வெற்றி பெறலாம்,” என்று உறுதியுடன் தெரிவித்தார்.
பேருந்தில் டிக்கெட் வழங்கும் ஒவ்வொரு தருணத்திலும், பெண்களும் எல்லைகளைத் தாண்டி முன்னேற முடியும் என்பதை கோகிலா அமைதியாக நிரூபித்து வருகிறார்.
English Summary
New achievement women Tiruppur bus Kokila conductor Avinashi route