திண்டுக்கல் : ஒரே நாளில் மூன்று தடுப்பூசி - குழந்தை உயிரிழந்ததற்கு காரணம் என்ன?
near dindukal birth babay died after fifty two days for three injuction in one day
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார் - சுகன்யா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த மாதம் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு 45 நாட்களில் போட வேண்டிய தடுப்பூசியை பெற்றோர் போடவில்லை.
இந்நிலையில் குழந்தை பிறந்து 52 நாட்கள் ஆனதால், நேற்று பிள்ளையார்நத்தம் குழந்தைகள் மையத்தில் ஆலம்பட்டி சுகாதார மைய ஊழியர்கள் அந்த குழந்தைக்கு மொத்தம் மூன்று தடுப்பூசி போட்டுள்ளனர். குழந்தையின் இரண்டு தொடைகளில் இரண்டு தடுப்பூசியும், கையில் ஒரு தடுப்பூசியும் போட்டனர். அப்போது, குழந்தை நன்றாக இருந்துள்ளது.
ஆனால், இன்று அதிகாலை திடீரென குழந்தையின் வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனே குழந்தையை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கெனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதைக்கேட்டு கதறி அழுத பெற்றோர் குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து, குழந்தையின் பெற்றோர் தெரிவித்ததாவது, "குழந்தைக்கு ஒரே நாளில் மூன்று தடுப்பூசி போட்டுள்ளார்கள். ஒரு ஊசி தான் போட வேண்டும். ஆனால், மூன்று ஊசி போட்டதால் குழந்தை உயிரிழந்துள்ளது.
குழந்தை உயிரிழப்பில் ஏதோ மர்மம் உள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் குழந்தையின் உடலை பெற்றுக்கொள்வோம்" என்று தெரிவித்தனர்.
English Summary
near dindukal birth babay died after fifty two days for three injuction in one day