யானைத் தாக்கி எஸ்டேட் தொழிலாளி உயிரிழப்பு - நீலகிரியில் சோகம்.!!
man died for elephant attack in nilagiri
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா நெலாக்கோட்டை பகுதியில் ராக்வுட் தேயிலைத் தோட்டம் அருகே ஆண் யானை ஒன்று கடந்த சில நாட்களாக முகாமிட்டு வந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள எஸ்டேட் தொழிலாளி ராஜேஷ் என்பவர் தனது மனைவி கங்காவுடன் நெலாக்கோட்டை பஜாரில் பூஜை சாமான்கள் வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீடு திரும்பினார்.

அப்போது, சாலையில் யானை நின்று கொண்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜேஷ், அவரது மனைவி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் ஆகியோர் ஆட்டோவில் இருந்து இறங்கி ஓடினர். உடனே யானை அவர்களை பின் தொடர்ந்து துரத்தி, ராஜேசை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்து அவரது மனைவி கதறி அழுதார். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் ராஜேஷ் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் வனத்துறை அதகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து நேற்று காலை மீண்டும் பொதுமக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
English Summary
man died for elephant attack in nilagiri