சீரற்று வளர்ந்து கிடந்த கருவேல மரங்கள்.. இளைஞர்களின் முயற்சியால், நெகிழ்ச்சியில் உசிலம்பட்டி மக்கள்..!
Madurai Usilampatti Lake Re Created by Youngster Peoples Happy
பல வருடமாக பாழடைந்து கிடந்த கண்மாயை இளைஞர்கள் தூர்வாரி, நன்கொடை அளித்தவர்களின் பெயர்கள் மற்றும் வரவு, செலவு கணக்குகளை பேனர் வைத்து காட்சிப்படுத்திய நிகழ்வு நடந்துள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளுக்கு, வாரம் ஒரு முறை ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்துள்ளது. ஆண்டுதோறும் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு தலைதூக்கத் தொடங்கி விடும் நிலையில், உசிலம்பட்டியில் உள்ள " 58 கிராம கால்வாய் குழு " என்ற அமைப்பை சார்ந்தவர்கள், இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண முடிவு செய்துள்ளனர்.
இதன்படி, பேருந்து நிலையம் எதிரே உள்ள சீமை கருவேல மரங்கள் அடர்ந்து காணப்பட்ட, பல வருடங்களாக நீரின்றி வறண்டு இருந்த கண்மாயை சீரமைக்க திட்டமிட்டுள்ளனர். கண்மாயை சீரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் வாங்கி, அரசு அனுமதியுடன் இதனை நடத்தியுள்ளனர். ஜே.சி.பி இயந்திரங்களை வாடகைக்கு எடுத்து முதற்கட்டமாக கண்மாயை ஆக்கிரமித்திருந்த கருவேல மரங்களை அகற்றிய நிலையில், மேடான பகுதிகளில் இருந்து மண்ணை அகற்றி அதனை கரைகளில் கொட்டி கரைகளை பலப்படுத்தி உள்ளனர்.
இரவு பகலாக நடந்த இந்த வேலையில், 55 ஏக்கர் பரப்பளவிலான கண்மாயை ஒரே மாதத்தில் முழுவதுமாக தூர்வாரி தண்ணீரை தேக்க நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். கடந்த மாதம் வைகை அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டதும், இந்த கண்மாய் கரைகளில் மரங்களை நட்டு அழகுபடுத்திய நிலையில், பல வருடமாக வரண்டு போயிருந்த கண்மாயில் தண்ணீரை பார்த்த அப்பகுதி கிராம மக்கள், 58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த மூன்று வருடங்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருக்காது என்றும், நிலத்தடி நீர் உயரும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிதி வசூல் வாங்கிய இளைஞர்கள், அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பேனர் வைத்து அவர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் கொடுத்த நன்கொடை விவரங்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Madurai Usilampatti Lake Re Created by Youngster Peoples Happy