ரூ.259 கோடி கிரானைட் மோசடி வழக்கு: துரை தயாநிதி வழக்கு ஒத்திவைப்பு!
Madurai Durai Dhayanithi case
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கிரானைட் வெட்டி ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பரபரப்பான புகார் எழுந்தது. இதில் ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம், பங்குதாரர்கள் எஸ். நாகராஜன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி மீது 2012-ஆம் ஆண்டு பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் கீழவளவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
2018-ஆம் ஆண்டு, 5,191 பக்க குற்றப் பத்திரிகை மேலூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழும் அமலாக்கத்துறை தனி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதனையடுத்து, துரை தயாநிதிக்கு சொந்தமான மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள ரூ.40.34 கோடி மதிப்பிலான சொத்துகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் தன்னை மனரீதியாக சீரற்ற நிலையில் உள்ளவர் எனக் கூறி, வழக்கிலிருந்து விலக்க கோரி துரை தயாநிதி மனு தாக்கல் செய்தார்.
அப்போது, அவரை நேரில் ஆஜர்படுத்தி மனநிலை சரிபார்க்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இருபுற வாதங்களையும் கேட்ட நீதிபதி, துரை தயாநிதியின் மருத்துவ ஆவணங்களை முழுமையாக தாக்கல் செய்ய உத்தரவு வழங்கி, வழக்கை ஜூன் 16-க்கு ஒத்திவைத்தார்.
English Summary
Madurai Durai Dhayanithi case