திருவண்ணாமலை மலையில் சட்ட விரோத கட்டடங்கள்: அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!
Madras High Court orders report on illegal buildings in Thiruvannamalai hills
திருவண்ணாமலை மலையில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலின் மலை பாதையில் உள்ள சட்ட விரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்கு, தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, எந்த அனுமதியும் பெறாமல், 1,535 கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என, எம்.கோவிந்தராஜன் குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதனை பதிவு செய்த நீதிபதிகள், 'திருவண்ணாமலை மலை பாதையில் 1,535 சட்ட விரோத கட்டுமானங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணை வரும் 20-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
English Summary
Madras High Court orders report on illegal buildings in Thiruvannamalai hills