தமிழகம் நோக்கி வரும் மழை மேகங்கள் : 10 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!
Low Pressure Alert Heavy Rains to Lash Tamil Nadu on Feb 21
தமிழகத்தில் கோடை வெப்பம் மெல்ல எட்டிப் பார்க்கும் வேளையில், வங்கக்கடல் ஒரு "கூலிங்" ட்விஸ்ட் கொடுத்துள்ளது. பிப்ரவரி 21-ஆம் தேதி தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்று (பிப். 16) காலை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவெடுத்துள்ளது. இது வரும் பிப். 18-ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
பிப். 19 - 20: தென் தமிழகக் கடலோரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கும்.
பிப். 21 (முக்கிய எச்சரிக்கை): மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிப். 22: தென் தமிழகத்தின் தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.
பனிமூட்டம்
மழைக்கு முன்னதாக, பிப். 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வட தமிழக மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவும். அதிகாலைப் பயணம் மேற்கொள்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம்.
English Summary
Low Pressure Alert Heavy Rains to Lash Tamil Nadu on Feb 21