விபத்தில் முடிந்த காதல் கதை...! காதலன் இறந்த சில மணி நேரங்களில் துயர முடிவைத் தேடிக்கொண்ட இளம் பெண்...!
love story that ended accident young woman sought tragic ending hours her lover death
நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் மறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் கல்லூரி மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஊட்டி அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞருக்கு மதுபானம் அருந்தும் பழக்கம் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 6-ஆம் தேதி அவர் தனது நண்பருடன் மதுபானம் அருந்திய பின்னர், நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாக பயணித்துள்ளார்.அப்போது கேத்தி அருகேயுள்ள சாந்தூர் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி கடுமையான விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் இளைஞரும், அவருடன் பயணித்த நண்பரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞரை ஊட்டியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் காதலித்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. காதலனின் திடீர் மரணச் செய்தியை அறிந்த மாணவி கடும் மனவேதனையில் ஆழ்ந்ததாக கூறப்படுகிறது.அதன்பின்னர் அவர் குடும்பத்தினருடன் இயல்பாக பேசாமல், தனிமையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடைபெற்ற நாளில் மாணவியின் சகோதரர் வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், அவரது தாய் கேரட் அறுவடை பணிக்காக தோட்டத்திற்கு சென்றிருந்தார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி, காதலனின் மறைவு ஏற்படுத்திய மனஉளைச்சலிலிருந்து மீள முடியாமல் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த புதுமந்து காவலர்கள் விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணையை தொடங்கினர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து, மாணவியின் உயிரிழப்புக்கான பின்னணி குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
love story that ended accident young woman sought tragic ending hours her lover death