சந்துக்கடையில் மதுகேட்டு தொல்லை: லாரி ஓட்டுனர் அடித்தே கொலை; உடலை எரிக்க முயன்ற கடை ஊழியர்களால் பரபரப்பு..!
Lorry driver beaten to death for causing trouble in Perambalur
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநந்தம் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் 37 வயதுடைய சுரேஷ். டிரைவராக வேலை பார்க்கும் இவர் மீது பலாத்காரம், கொலை முயற்சி, தாக்குதல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தொடர்பாக இவர் பல முறை சிறை சென்று திரும்பியுள்ளார். அத்துடன் சுரேஷ் மிகவும் மதுபோதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை கொளத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக சந்து கடையில் மதுவிற்பனை செய்யப்பட்டு வந்தது சுரேசிற்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற அவர் இலவசமாக மது கேட்டுள்ளார். அதற்கு கடை ஊழியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களிடம் சுரேஷ் தகராறு செய்துள்ளார்.

இதனால் கோபம் அடைந்த கடை ஊழியர்கள் சுரேஷை சரமாரியாக தாக்கியுள்ளனர். அத்துடன், ஊருக்கு வெளியே இருந்த குளத்துகரையில் வீசியா நிலையில், அங்கு சுரேஷ் உயிரிழந்துள்ளார். இதையறிந்த சட்டவிரோதமாக மது விற்ற சந்துக்கடை ஊழியர்கள் சுரேஷ் உடலை மீட்டு கயிற்று கட்டிலில் போட்டு தீ வைத்து எரிக்க முயன்றுள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் விஏஓ கமல்ஹாசனுக்கு தகவல் அளித்துள்ளனர்.
அப்போது விரைந்து வந்த அவர் சுரேஷ் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் மருவத்தூர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் சுரேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து, மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்துள்ளார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Lorry driver beaten to death for causing trouble in Perambalur