கரூர் சம்பவம் என் மனதில் ஆறாத காயம்...பின்னணியில் இருந்தது யார் எனத் தெரியும்...! - மேடையிலேயே சதியை போட்டுடைத்த முதல்வர் விஜய்...!
Karur incident unhealed wound my heart know who background Chief Minister Vijay who hatched conspiracy stage
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி கரூரில் நடைபெற்ற த.வெ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சமும், த.வெ.க. சார்பில் தலா ரூ.20 லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது.
இந்தச் சூழலில், உயிரிழந்த குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் இன்று கரூர் வந்தார். இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கக் கூடாது என்று தொடரப்பட்ட மனு, சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, தற்காலிக அடிப்படையில் பணி வழங்கலாம் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 32 குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்கு, அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப அரசு பணிக்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து கரூருக்கு கார் மூலம் வந்த முதலமைச்சர் விஜய்க்கு வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய் பேசியதாவது,""ஒரு மனிதன் எவ்வளவு உயரத்தை அடைந்தாலும், வாழ்க்கையில் ஏற்பட்ட சில காயங்களையும், மனவேதனைகளையும் ஒருபோதும் மறக்க முடியாது. என் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை கடந்திருக்கிறேன். ஆனால், அவை அனைத்தையும் விட கரூர் சம்பவம்தான் என் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியது.
அந்த துயரத்தின் மத்தியில் இருந்த என்னை, ஓடி ஒளிந்துவிட்டேன் என்று கூறுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. அன்றும் சொன்னேன்... இன்றும் சொல்கிறேன்... நாளையும் சொல்வேன்... தைரியமாகவும், துணிவாகவும் சொல்வேன்.என்னிடம் பணமா? மக்களா? என்று கேட்டால், என் பதில் எப்போதும் மக்கள்தான். மக்களின் நம்பிக்கையையும், உயிரையும் விட எனக்கு வேறு எதுவும் முக்கியமில்லை.பெரம்பலூருக்கு செல்லும் முன்பு கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி அங்கு செல்ல வேண்டாம் என்று காவலர்கள் தெரிவித்தனர்.
ஆனால், நாமக்கல்லில் இருந்து கரூருக்கு வந்தபோது அங்கிருந்த காவலர்கள் எந்தவித முன்னெச்சரிக்கையும் வழங்காதது ஏன்? நெடுஞ்சாலையில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கே எங்களை அழைத்துச் சென்றதும் காவலர்கள்தான். இப்படி நடந்தால் இப்படி செய்யுங்கள், அப்படி நடந்தால் அப்படி செய்யுங்கள் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது யார்? கரூர் காவலர்களை நான் முழுமையாக நம்பினேன்.
ஆனால், அவர்களுக்கு பின்னால் அறிவுறுத்தல்கள் வழங்கியது யார்? கரூர் சம்பவத்தின் உண்மை பின்னணி என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.நமக்கு அளவற்ற வேதனையையும் காயங்களையும் ஏற்படுத்தியவர்களுக்கு, 2026-ம் ஆண்டு தேர்தலில் மக்கள் தக்க பதிலை வழங்கியுள்ளனர். ஆனால், அதுவே இறுதி அல்ல. இனி யாரும் இதுபோன்ற அரசியல் சூழ்ச்சிகளை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மக்கள் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவை நிலைநிறுத்தவும், அந்த துயர வரலாற்றை வருங்கால தலைமுறையினர் மறக்காமல் இருக்கவும் த.வெ.க. சார்பில் கரூரில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்.அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று 'தாய்மாமன் தங்க மோதிரம்' என்ற புதிய நலத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நான் ரீல் தாய்மாமன் அல்ல... ரியல் தாய்மாமன்.பேசுங்கள்... பேசுங்கள் என்று சொல்கிறார்கள்.
ஆனால், நான் பேசத் தொடங்கியவுடன் வெளியேறி விடுகிறார்கள். 'பார்ட்டி பண்ட்' என்று சட்டப்பேரவையில் கூறியவுடன், அங்கிருந்து வெளியேறிய காட்சியை மக்கள் பார்த்துள்ளனர்.நம்முடைய ஆட்சியை சோபா ஆட்சி, வாஷிங் மெஷின் ஆட்சி என்று விமர்சிக்கிறார்கள். ஆனால், அரசியலை வியாபாரமாக மாற்றிய உண்மையான 'வெண்டிங் மெஷின்' யார் என்பதை மக்களே நன்றாக அறிவார்கள்.மத்திய அரசு கொண்டு வர முயற்சிக்கும் தொகுதி மறுசீரமைப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது.
மேகதாது அணை விவகாரத்தில் பேச வேண்டிய இடத்தில் நாங்கள் உறுதியாக பேசுகிறோம். குறைவாக பேசுவோம்... அதிகமாக செயல்படுவோம் என்பதே எங்கள் கொள்கை.கரூரைச் சேர்ந்த ஒரு நிறுவன உரிமையாளர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. ஓடிக்கொண்டே இருக்கிறார்.
இன்னொருவர் வெளிநாட்டில் மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார்.தீய சக்தியும், தீர்ந்து போன சக்தியும் வேறல்ல. இரண்டும் ஒரே கூட்டணி. 'எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை' என்று நிரூபிக்க முடியுமா? இடைத்தேர்தலில் நிரூபித்துவிட்டு பிறகு பேசுங்கள்.த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒரு பைசா லஞ்சமும் இல்லை, ஊழலும் இல்லை.
அரசு அலுவலகங்களில் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன. பொதுமக்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. இதனை மக்களே நேரடியாக கூறும்போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.இன்று நான் கூறியவை ஒரு சிறிய முன்னோட்டம் மட்டுமே. இனிவரும் நாட்களில் இந்த அரசின் முழுமையான செயல்பாட்டை மக்கள் நேரில் காண்பார்கள்".இவ்வாறு முதலமைச்சர் விஜய் உரையாற்றினார்.
English Summary
Karur incident unhealed wound my heart know who background Chief Minister Vijay who hatched conspiracy stage