கருமுத்து கண்ணன் மறைவு | டாக்டர் இராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!
karumuthu kannan death
கருமுத்து கண்ணன் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் இரங்கல் செய்தியில், "மதுரை மீனாட்சியம்மன் கோயில் அறங்காவலரும், கலைத்தந்தை கருமுத்து தியாகராச செட்டியாரின் புதல்வருமான கருமுத்து கண்ணன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
கருமுத்து கண்ணன் அவரது குடும்ப மரபுவழியின்படி கல்விக்கும், ஆன்மிகத்திற்கும் தொண்டாற்றி வந்தவர். எனது அன்புக்கு உரியவர். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். அவரது தந்தை கருமுத்து தியாகராச செட்டியார் அவர்கள் தான் தனித்தமிழில் ‘தமிழ்நாடு’ என்ற நாளிதழை நடத்தினார். அது தான் தமிழ் ஓசை நாளிதழை நான் தொடங்குவதற்கு தூண்டுதலாக அமைந்தது. தந்தை வழியில் கருமுத்து கண்ணனும் தமிழுக்கும், கல்விக்கும் பெரும் தொண்டாற்றி வந்தார்.
கருமுத்து கண்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் விடுத்துள்ள இரங்கல் செய்தி : தலைசிறந்த கல்வியாளரும், ஆற்றல்மிகு தொழிலதிபரும், ஆன்மீகவாதியுமான திரு.கருமுத்து தி.கண்ணன் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள இரங்கல் செய்தி : சிறந்த கல்வியாளரும், ஆன்மீகவாதியும், பாரம்பரியமிக்க மதுரை தியாகராஜர் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான திரு.கருமுத்து கண்ணன் மறைந்தார் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.
மறைந்த மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்களின் அன்பைப் பெற்ற திரு.கருமுத்து கண்ணன் அவர்கள் அறநிலையத்துறை உள்ளிட்ட அரசின் துறைகளில் கவுரவப்பதவிகளை வகித்ததோடு, கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களில் குறிப்பிடத்தக்கவராக திகழ்ந்தார். கருமுத்து கண்ணன் மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.