காஞ்சிபுரம் மார்க்கெட்டில் கூலி தொழிலாளி கொலை: பல கோணங்களில் போலீஸ் விசாரணை
Kanjipuram murder case
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ராஜாஜி காய்கறி மார்க்கெட் அருகே கூலி தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முரளி என்ற இவர், அங்கு காய்கறி மூட்டைகள் இறக்கும் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மது அருந்தும் பழக்கம் கொண்ட அவர், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி வீட்டிற்கு செல்லாமல் மார்க்கெட் அருகிலேயே தங்கியிருப்பது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த இரவு, வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு மது அருந்திய நிலையில் இருந்த முரளி, பின்னர் மார்க்கெட் அருகே ரத்தக் குளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது தலையில் பல இடங்களில் காயங்கள் இருந்தது கொலைக்கான சாத்தியத்தை காட்டுகிறது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்களை சேகரித்த போலீசார், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை, குறிப்பாக கணவன்-மனைவி இடையிலான சொத்து தகராறு காரணமாக நடந்ததா அல்லது மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் தாக்குதல் நடந்ததா என்பது குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது.
டி.எஸ்.பி. சங்கர் கணேஷ் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மார்க்கெட் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.