விளைச்சல் சரிவு தாக்கம்...! - பிஸ்தா பருப்பு விலை அதிரடி உயர்வு...!
Impact yield decline Pistachio nut prices surge
முந்திரி, பாதாம் போன்ற உலர் பருப்பு வகைகளின் பட்டியலில் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள பிஸ்தா, இன்று ஆரோக்கியத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
புரதம், நார்ச்சத்து, நல்ல கொழுப்புச் சத்துகள் மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ள இந்த பிஸ்தா, இதய நலனை பாதுகாக்கவும், உடல் எடையை சமநிலைப்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கண் பார்வை திறனை மேம்படுத்தவும் முக்கிய பங்காற்றுகிறது.

உலகளவில் பிஸ்தா உற்பத்தியில் அமெரிக்கா முதலிடத்தை தக்கவைத்துள்ளது. உலக சந்தையின் தேவையில் சுமார் 65 முதல் 70 சதவீதம் வரை அந்நாட்டிலிருந்தே பூர்த்தி செய்யப்படுகிறது. இரண்டாவது இடத்தில் உள்ள ஈரானில் கடந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு விளைச்சல் கிடைக்காததால், உலகளாவிய விநியோகத்தில் கணிசமான குறைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஐஸ்கிரீம், சாக்லேட், ஆரோக்கிய பானங்கள் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் தயாரிப்பில் பிஸ்தாவின் பயன்பாடு அதிகரித்து வருவதால், அதன் தேவை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. இந்த தேவை விநியோக இடைவெளி, சந்தையில் விலை உயர்வை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பிஸ்தா விலை சுமார் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, மார்ச் மாதத்தில் ஒரு கிலோ பிஸ்தா ரூ.938 வரை உயர்ந்து, 2018-ம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்ச விலையை பதிவு செய்துள்ளது.
தரத்தைக் கருத்தில் கொண்டு, பிஸ்தா தற்போது ரூ.700 முதல் ரூ.2,200 வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.இந்த நிலை தொடர்ந்தால், பிஸ்தா பற்றாக்குறை மேலும் தீவிரமடைந்து, உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் விலையை மேலும் உயர்த்தும் சூழ்நிலை உருவாகலாம் என சந்தை நிபுணர்கள் எச்சரிக்கை தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Impact yield decline Pistachio nut prices surge