காதல் வலையில் விழுந்த மாணவிக்கு நேர்ந்த கொடூரம்! வீடியோவை காட்டி மிரட்டிய காதலன்...! - தற்கொலை விளிம்பில் இளம்பெண்
horror that befell student who fell into trap love boyfriend threatened her video young woman verge suicide
கரூர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், புகழூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (25) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் அந்த இளம்பெண் பாலமுருகனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன், கடந்த மார்ச் 22-ந்தேதி கல்லூரி விடுதியில் தங்கி இருந்த மாணவியை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, “நீ என்னை வந்து சந்திக்கவில்லை என்றால் உயிரை மாய்த்துக்கொள்வேன்” என மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, கோவையிலிருந்து கரூருக்கு வந்து பாலமுருகனை சந்தித்து பேசியுள்ளார். பின்னர், அவரை மீண்டும் கோவைக்கு பேருந்தில் அனுப்பி வைப்பதாக கூறி மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது வழியிலேயே வாகனத்தை நிறுத்திய பாலமுருகன், தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த தாலிக்கயிற்றை எடுத்து மாணவியின் கழுத்தில் வலுக்கட்டாயமாக கட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.இதனால் கடும் அதிருப்தியடைந்த மாணவி அங்கிருந்து பேருந்தில் கோவைக்கு திரும்பிச் சென்றுள்ளார்.
பின்னர் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால் சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், கடந்த 8-ந்தேதி இரவு பாலமுருகன் அவரது வீட்டிற்கு சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அப்போது, “என்னுடன் வரவில்லை என்றால் தாலி கட்டிய காட்சிகளை அனைவருக்கும் அனுப்பிவிடுவேன்.
உன்னையும், உன் குடும்பத்தினரையும் வீட்டோடு எரித்து கொன்றுவிடுவேன்” என்று மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த மிரட்டலால் மனமுடைந்த மாணவி, எலி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு கரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையிலுள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, மாணவிக்கு கட்டாயமாக தாலி கட்டி மிரட்டல் விடுத்த பாலமுருகனை கைது செய்துள்ளனர். மேலும் சம்பவத்தின் பின்னணி குறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
horror that befell student who fell into trap love boyfriend threatened her video young woman verge suicide