தமிழக அரசு உயர் அதிகாரிகளுடன் ஆளுநர் இன்று சந்திப்பு...! - அடுத்தது என்ன?
Governor to meet with top Tamil Nadu government officials today What next
தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி மாநில அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் 5 சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர் பலம் இன்னும் எட்டப்படாததால், மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக தொடர்ந்து எதிர்நோக்கி வருகிறது.

இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் நேற்று மாலை தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை நேரில் சந்தித்து, தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென கோரி உரிமை மனுவை வழங்கினார். ஆனால், பெரும்பான்மை உறுப்பினர்களின் உறுதியான ஆதரவு இல்லாத காரணத்தால், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் நிலைக்கு ஆளுநர் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பரபரப்பு தீவிரமடைந்த நிலையில், இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்த விஜய், “தனிப்பெரும் கட்சி” என்ற அடிப்படையில் முதன்மை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்-அமைச்சராக பதவியேற்ற பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும் விஜய் ஆளுநரிடம் உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், விஜயின் தொடர்ச்சியான சந்திப்புகளுக்குப் பின்னர் தமிழக அரசின் உயர் நிர்வாக அதிகாரிகளும் ஆளுநர் அர்லேகரை இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளார்.
அதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மாநில காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோரும் ஆளுநருடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புகளில் முதல்-அமைச்சர் பதவியேற்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகள், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் அரசியல் சூழ்நிலையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
Governor to meet with top Tamil Nadu government officials today What next