ஆட்டோவில் கிடந்த தங்கம்! 20 சவரன் தங்கம் நகையை ஒப்படைத்த திருவாரூர் நேர்மை ஊழியர் துரை!பரிசு மழை பொழிந்த நகைக் கடைக்காரர்
Gold found in auto Thiruvarur honesty worker Durai handed over 20 sovereigns of gold jewelry Jewelry shop owner showered with gifts
இன்றைய வேகமான உலகில் மனிதர்களுக்கிடையே மனிதாபிமானமும், நேர்மையும் அரிதாகி வரும் நிலையில், திருவாரூரில் நிகழ்ந்த ஒரு சம்பவம் சமூகத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வறுமையிலும் நேர்மையை கைவிடாமல் செயல்பட்ட தூய்மை பணியாளர் துரையின் செயல், இன்னும் உலகில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதற்கான உயிர்ப்பான சான்றாக அமைந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி குப்புசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் – முத்துலட்சுமி தம்பதியினரின் மகள் அட்சயா தேவிக்கு வரும் மார்ச் 8-ஆம் தேதி திருத்துறைப்பூண்டியில் திருமணம் நடைபெற உள்ளது. மகளின் திருமணத்திற்காக வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகச் சேமித்து, 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை அவர்கள் வாங்கியிருந்தனர். மார்ச் மாதம் வரை நகைகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது என்பதால், திருவாரூர் மாவட்டம் ஆலத்தம்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் அவற்றை பத்திரப்படுத்த முடிவு செய்தனர்.
இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை இருந்து ரயிலில் திருவாரூர் வந்த தம்பதியினர், விருப்பாச்சி தெருவில் தங்கியிருந்து பின்னர் ஆட்டோ மூலம் திருவாரூர் புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றனர். அவசரத்தில் இறங்கிய போது, திருமண நகைகள் இருந்த மஞ்சள் நிறக் கட்டைப் பையை ஆட்டோவில் மறந்துவிட்டனர். சில நிமிடங்கள் கழித்தே நகைகள் தொலைந்தது தெரிய வந்ததால், தம்பதியினர் பதறி கண்ணீர் மல்க கதறினர்.
அதே நேரத்தில், விருப்பாச்சி நடப்பு தெருவில் நகராட்சி தூய்மை பணியாளர் துரை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு கட்டைப் பையை கவனித்த அவர், அதைத் திறந்து பார்த்தபோது தங்க நகைகளும் வெள்ளிப் பொருட்களும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒரு நிமிடமும் தாமதிக்காமல், நகராட்சி அலுவலகத்துக்கும் பின்னர் திருவாரூர் நகர காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, துரை ஒப்படைத்த பையில் 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் அப்படியே இருந்தன.
சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநரின் தகவல்களின் அடிப்படையில், நகைகளைத் தொலைத்த ராதாகிருஷ்ணன் – முத்துலட்சுமி தம்பதியினர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். தூய்மை பணியாளர் துரை முன்னிலையில், நகைகள் அடங்கிய பையை காவல்துறையினர் தம்பதியினரிடம் ஒப்படைத்தனர். தங்கள் மகளின் திருமணத்திற்காக சேமித்த சொத்து மீண்டும் கிடைத்த மகிழ்ச்சியில், தம்பதியினர் துரையின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.
துரையின் நேர்மையை பாராட்டும் வகையில், திருவாரூர் நகர காவல் நிலையம் சார்பில் அவருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மேலும், இந்தச் சிறந்த செயலை அங்கீகரிக்கும் வகையில், அந்தப் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடை உரிமையாளர் துரை தம்பதிக்கு பொன்னாடை போர்த்தி ரூ.15,000 ஊக்கத் தொகையையும், வீட்டு உபயோகப் பொருட்களையும் பரிசாக வழங்கினார்.
வறுமையிலும் அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாமல், நேர்மையை வாழ்வின் அடையாளமாக கொண்ட துரையின் செயல், சமூகத்திற்கு ஒரு வலுவான பாடமாக அமைந்துள்ளது. இந்த சம்பவம், மனிதநேயமும் நேர்மையும் இன்னும் நம்மிடையே உயிரோடு இருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
English Summary
Gold found in auto Thiruvarur honesty worker Durai handed over 20 sovereigns of gold jewelry Jewelry shop owner showered with gifts