கோகுல்ராஜ் கொலை வழக்கு எதிரொலி | சிசிடிவி கேமரா பதிவுகளை கையாள்வதில் புதிய விதிமுறைகள்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
GokulRaj Murder case judgement CCTV new rule
சேலம் : ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த வழக்கில், கைதான பத்து பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்தும், ஐந்து பேரை விடுதலை செய்தும் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்தும், யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரியும் மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, பிறழ்சாட்சியாக ஆஜரான சுவாதியிடம், வழக்கு தொடர்பான வீடியோவை மீண்டும் மீண்டும் போட்டுக்காட்டி நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதன்படி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை தொடர்பான மேல்முறையீடு வழக்குகளின் தீர்ப்பில், "குற்ற வழக்குகளின் ஆதாரமான சிசிடிவி பதிவுகளை கையாள்வதில் காவல்துறைக்கு புதிய விதிமுறைகள் வரையறுத்து" சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, கண்காணிப்பு கேமரா பதிவுகளில் சம்பவ இடத்தை அடையாளம் காணும் வகையில் வீடியோக்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
கேமரா பதிவுகளை பெறும்போது நேரத்தை குறிப்பிட்டு பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். கேமரா குறித்த தொழில்நுட்ப விவரங்களை பதிவுசெய்ய வேண்டும்.
கேமரா பதிவுகளை ஆராயும்போது, வேறொரு கேமராவில் படம்பிடிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
GokulRaj Murder case judgement CCTV new rule