ஈரான்-இஸ்ரேல் மோதலால் நிறுத்தப்பட்ட விமானங்கள் மீண்டும் இயக்கம்...! - மதுரை-துபாய் சேவை தொடக்கம்
Flights Halted Due Iran Israel Conflict Resume Operations Madurai Dubai Service Launched
ஈரான்- இஸ்ரேல் இடையே வெடித்துள்ள கடும் போர் பதற்றம் உலகளாவிய விமானப் போக்குவரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 28-ந்தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் படைத்தளங்களை ஈரான் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தொடர்ச்சியான மோதல் மேற்காசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது.இந்த சூழ்நிலையின் தாக்கமாக, பாதுகாப்பு காரணங்களால் மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய் மற்றும் அபுதாபி நகரங்களுக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவைகள் மார்ச் 2 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இதனால் வெளிநாட்டு பயணிகள் மற்றும் தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.இந்நிலையில், ஈரான்–இஸ்ரேல் மோதல் காரணமாக எட்டு நாட்களாக முடங்கியிருந்த விமான சேவை மீண்டும் உயிர் பெறுகிறது.
மதுரை – துபாய் இடையிலான விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்படுவதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகளுக்கு பெரிய நிம்மதி கிடைத்துள்ளது.
மேலும், மதுரை மட்டுமின்றி கோழிக்கோடு, அகமதாபாத்,புனே, ஜெய்ப்பூர், டெல்லி மற்றும் மும்பை உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் துபாய் நோக்கி ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் மீண்டும் இயக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதனால் இந்தியா – வளைகுடா நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Flights Halted Due Iran Israel Conflict Resume Operations Madurai Dubai Service Launched