திருவள்ளூரில் பயங்கரம்: ஊதுபத்தி தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீ; ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்..!
Fire breaks out at blowtorch factory in Thiruvallur
திருவள்ளூர் மாவட்டத்தில், இயங்கிவந்த தனியார் ஊதுபத்தி மற்றும் சாம்புராணி தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயில் கருகி சுமார் 10 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளமை பேசும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் - பெரியபாளையம், எர்ணாக்குப்பம் பகுதியில் இந்த தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் ஊதுபத்தி, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்கள் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தொழிற்சாலைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை திடீரென தொழிற்சாலையில் தீப்பற்றி இருந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த தேர்வாய் சிப்காட் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்க போராடிய நிலையில், தீ மளமளவென எரிந்ததால், அனைத்து பகுதிகளுக்கும் வேகமாக பரவி, கரும்புகை சூழ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

இதனையடுத்து, பொன்னேரி, கண்டிகை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலிருந்து மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 10 கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று விடுமுறை நாள் என்பதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Fire breaks out at blowtorch factory in Thiruvallur