எல்லையை முற்றுகையிடப் புறப்பட்ட விவசாயிகள்...! மேகதாது அணை திட்டத்திற்கு எதிராகக் கிளம்பிய பிரமாண்ட பேரணி...!
Farmers set out blockade border grand rally against Mekedatu Dam project
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது பகுதியில் புதிய அணை அமைக்கும் திட்டத்தை கர்நாடக அரசு முன்னெடுத்து வருகிறது. அந்த அணையின் மூலம் சேமிக்கப்படும் நீரை மாநிலத்தின் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரின் வரத்து பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக விவசாய அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக மேகதாது அணைத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்திற்கு மாதந்தோறும் வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு தடையின்றி வழங்க வேண்டும் என்றும், இரு மாநில விவசாயிகளின் நீண்டகால நலனை கருத்தில் கொண்டு ராசிமணல் பகுதியில் புதிய அணை அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி மேகதாது பகுதியை முற்றுகையிட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தீர்மானித்தது.அதன்படி நேற்று காலை, சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் தஞ்சாவூர் பெரிய கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு போராட்டப் பயணம் தொடங்கப்பட்டது.
இந்த பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். சங்கத் தலைவர் திருப்பதி, துணைத் தலைவர் கிருஷ்ணமணி, துணைச் செயலாளர் சுவாமிநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து புறப்பட்டனர்.தஞ்சாவூரில் தொடங்கிய இந்த வாகனப் பேரணி திருச்சி, நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி வழியாக ஓசூரை சென்றடைந்தது.
பின்னர் ஓசூர் மூக்கண்டப்பள்ளி பகுதியில் இருந்து கர்நாடக எல்லையை நோக்கி விவசாயிகள் பேரணியாக முன்னேறினர்.பயணத்தின் போது மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய விவசாயிகள், காவிரி நீர் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர்.
விவசாயிகளின் பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எல்லைப்பகுதிகளில் காவலர்கள் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Farmers set out blockade border grand rally against Mekedatu Dam project