ஒரே கிளிக்கில் தேர்தல் தகவல்கள்...! - புரோ மாட்யூல் பயிற்சி மாநிலம் முழுவதும்...!
Election information one click Pro module training across state
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளை மேலும் துல்லியமாகவும் துரிதமாகவும் முன்னெடுக்க தொழில்நுட்ப முன்னேற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் முக்கிய கட்டமாக, “புரோ மாட்யூல் (PRO Module - ECINET)” தொடர்பான மாநில அளவிலான சிறப்பு பயிற்சி முகாம் நேற்று சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது.
இந்த “இசிஐநெட் புரோ மாட்யூல்” என்பது, வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நவீன செயலியாகும். வாக்குச்சாவடி அலுவலர்கள் வருகை பதிவு, வாக்குப்பதிவு உபகரணங்கள் சரிபார்ப்பு, மாதிரி வாக்குப்பதிவு நடைமுறை, வாக்குப்பதிவு தொடக்கம், நேரம் தோறும் வாக்குப்பதிவு சதவீத அப்டேட், வாக்குப்பதிவு நிறைவு போன்ற அனைத்து முக்கிய தகவல்களையும் கைப்பேசி செயலியின் மூலம் நேரடியாக பதிவு செய்து உடனுக்குடன் பகிரும் வசதியை இந்த மாட்யூல் வழங்குகிறது.

இந்த மாநில அளவிலான பயிற்சியில் அனைத்து தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டு தொழில்நுட்ப அறிவைப் புதுப்பித்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் சந்தோஷ் பதாரியா மற்றும் தருண் மிஸ்ரா ஆகியோர் நேரில் பங்கேற்று வழிகாட்டுதல்களை வழங்கினர்.
அவர்களின் மேற்பார்வையில், அதிகாரிகளுக்கு புரோ மாட்யூலை திறம்பட பயன்படுத்துவது குறித்து நேரடி செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது.மேலும், தேர்தல் நாளில் எந்தவித தாமதமும் இல்லாமல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றி பரிமாறுவதற்காக, தரவுகளை முழுமையாக டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கும் திறனை அதிகாரிகள் பெறும் வகையில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, அனைத்து தொகுதிகளிலும் களநிலையிலேயே செயல்திறன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரடியாக வாக்குச்சாவடிகளில் இருந்து செயலியைப் பயன்படுத்தி சோதனை செய்தனர். மண்டல அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், இந்த செயலி குறைபாடின்றி செயல்படுகிறதா என்பதை நிகழ்நேர கண்காணிப்பின் மூலம் உறுதி செய்தனர்.
இன்றைய பயிற்சியும் களச் சோதனையும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், புரோ மாட்யூலின் இறுதி கட்ட செயல்திறன் சோதனை நாளை (15ஆம் தேதி) அனைத்து வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் வேகத்தை அதிகரிக்கும் இந்த புதிய தொழில்நுட்பம், ஜனநாயகப் பணிகளை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Election information one click Pro module training across state