தூத்துக்குடியில் தேர்தல் சூடு! ரூ.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்...! - கண்காணிப்பு தீவிரம்
Election fever Thoothukudi 73 lakh cash seized Vigilance intensified
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் தொடர்ந்து தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த சோதனைகளின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் குறித்த விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஷு மகாஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட மொத்த ரொக்கத் தொகையாக ரூ.73 லட்சத்து 66 ஆயிரத்து 296 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டிருந்த இலவசப் பொருட்கள் ரூ.10 லட்சத்து 17 ஆயிரத்து 548 மதிப்பில் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்து 425 மதிப்பிலான மதுபானங்களும், ரூ.8 லட்சத்து 71 ஆயிரத்து 390 மதிப்பிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதனுடன், உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.62 லட்சத்து 62 ஆயிரத்து 470 தொகை மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தேர்தல் காலத்தில் ரூ.50,000-க்கும் அதிகமான ரொக்கப் பணம் அல்லது பரிசுப் பொருட்களை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Election fever Thoothukudi 73 lakh cash seized Vigilance intensified