பருவமழையை எதிர்கொள்ளத் தீவிரம்...! அடையாறு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஜி.எஸ்.சமீரன் அதிரடி ஆய்வு...!
Eager face monsoon Corporation Commissioner GS Sameeran conducts thorough inspection Adyar zone
சென்னையில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அடையாறு மண்டலத்தில் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.திருவான்மியூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளிக்கு சென்ற மாநகராட்சி ஆணையாளர், பள்ளியின் அன்றாட செயல்பாடுகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளியில் நடைபெறும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்ததுடன், மாணவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் கருத்துகளையும் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு அடையாறு மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்.மழைக்காலத்தில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் வடிகால்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மழை பெய்வதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொண்டு, பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர் என்.காளிதாஸ் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.இவ்வாறு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Eager face monsoon Corporation Commissioner GS Sameeran conducts thorough inspection Adyar zone