வெறுப்புணர்வைத் தூண்டாதீர்கள்! - தரமணி விவகாரத்தில் பொய் செய்திகளைப் பரப்புவோருக்குத் தமிழக அரசு எச்சரிக்கை
Do not incite hatredTamil Nadu government warns those spreading false news Taramani incident
சென்னை தரமணியில் நிகழ்ந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொடூரக் கொலை வழக்கு, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகப் பரவி வரும் வதந்திகளுக்குத் தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இந்தத் துயரச் சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த சிகந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட ஐந்து பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், இந்தப் படுகொலைகளுக்குப் பின்னால் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு இருப்பதாகச் சமூக வலைதளங்களில் சில விஷமிகள் தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்.

இது குறித்துத் தமிழக தகவல் சரிபார்ப்பகம் (Tamil Nadu Fact Check) வெளியிட்டுள்ள அறிக்கையில், "புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்ற மாய பிம்பத்தை உருவாக்குவது மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
காவல்துறையின் விரிவான விசாரணையில், இந்தக் கொலையைச் செய்தது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெள்ளத்தெளிவாக உறுதியாகியுள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் பாதிக்கப்பட்ட கௌரவ் குமாரின் சொந்த மாநிலத்தைச் சேர்ந்த சக தொழிலாளர்கள் என்பதும், அவர்களுக்குள் நிலவிய தனிப்பட்ட பகை மற்றும் உள்விவகாரங்களே இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணம் என்பதும் அம்பலமாகியுள்ளது.
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் முழு பாதுகாப்புடன் வாழ்ந்து வரும் நிலையில், தனிநபர் மோதல்களை மாநிலத்தின் பாதுகாப்புச் சூழலோடு தொடர்புபடுத்துவது அப்பட்டமான பொய் என அரசு சாடியுள்ளது.சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் வதந்திகளைப் பரப்புவது சட்டப்படி கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, செய்திகளின் உண்மைத்தன்மையை உணர்ந்து, வெறுப்புணர்வைத் தூண்டும் பதிவுகளைத் தவிர்க்குமாறு அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
English Summary
Do not incite hatredTamil Nadu government warns those spreading false news Taramani incident