'திமுக ஆட்சியில் நடந்தது போலவே தவெக ஆட்சிலும் இந்து சமயம் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது'; அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு..!
Arjun Sampath alleges that the Hindu religion continues to be disrespected under the TVK government
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி, மதுரை பழங்காநத்தத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சோலைகண்ணன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்துக்கொண்டு பேசும் போது கூறியதாவது;
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் அழுத்தம் காரணமாக நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற திமுக அரசு தவறிவிட்டது என்றும், தனி நீதிபதி உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த தடையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பும் அமல்படுத்தாமல் தடுக்கின்றனர் என்றும், திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் 02 ஆண்டுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்த நிலை பின்பற்றப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார். இதை கடுமையாக கண்டிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு, திமுகவை பின்பற்றுகிறது என்றும், தவெக அரசு நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், அமைச்சர் திமுகவினர் போல் நடந்துகொள்ளாமல் முதல்வர் விஜய் போல் நடந்து கொள்ள வேண்டும் என்றும், முதல்வர் விஜய் டெல்லி சென்றார், பிரதமரிடம் நிதி கேட்டார், மத்திய அரசு நிதி வழங்கியது. இதேபோல் அமைச்சர்களும் நடந்து கொள்ள வேண்டும் என்றும், சாதி, மத பிரச்சினைகளை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடுவது திமுகவின் வேலை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், சிறுபான்மையினரின் வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என திமுக நம்பியது. ஆனால், அந்த ஓட்டுகள் தவெகவுக்கு சென்றது.தற்போது திமுகவினர் புலம்பி திரிகின்றனர் என்று தெரிவித்துள்ளதோடு, அவர்களுக்கு இதுவும் வேணும், இன்னும் வேண்டும் என்று கூறியதோடு, திமுகவினர் புலம்புவதை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது என்று பேசியுள்ளார்.
மேலும், தவெக ஆட்சியில் இந்து சமயம் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது என்றும், சபாநாயகர் சட்டப்பேரவையில் பைபிள் படிக்கிறார். அவர் பகவத் கீதையையும் படிக்க வேண்டும். அப்படி நடந்தால் இது மதசார்பற்ற அரசு என நம்புவோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், முதல்வர் விஜய் திருச்செந்தூர், கொல்லூர் கோயில்களுக்கு செல்கிறார். தான் எல்லா மதத்துக்கும் பொதுவானவர் என வெளியே நிலைநாட்ட நினைக்கிறார். ஆனால் நடப்பது வேறு விதமாக உள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், சிறுபான்மைத்துறை அமைச்சர் தலைமை செயலகத்தில் இஸ்லாமிய முறைப்படி பதவியேற்கிறார். இது எப்படி மதசார்பற்ற அரசாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, சபாநயாகருக்கும், அமைச்சர் வன்னியரசுக்கும் கிறிஸ்தவ அமைப்புகள் பாராட்டு விழா நடத்துகிறார்கள். அதில் பேசியவர்கள் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் என்று கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேப்போன்று, மாணவர்கள் மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது என கல்வித்துறை அமைச்சர் கூறுகிறார். இதை கிறிஸ்தவ, இஸ்லாமிய மாணவர்களிடம் கூற முடியுமா? என்றும், இந்து மாணவர்களிடம் மட்டும் கூறுவது ஏன்? இந்து சமயத்தை அவமதிக்காதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கேரளாவில் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. மூன்று மொழிகளை படிப்பது என்ன குற்றமா? தமிழகத்தில் மும்மொழி கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் அறிவிப்பு ஆளுநர் உரையில் இடம் பெறும் என நினைத்தோம். ஆனால், அந்த அறிவிப்பு வரவில்லை. மாறாக திட்டத்தை நிறைவேற்றாமல் இருப்பதற்காக திமுக அரசு கடன் வாங்கி வைத்து விட்டுச் சென்றதாக கூறுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் எங்கு பார்ததாலும் போதைப் பொருள் நடமாட்டம், பெண்களுக்கு பாதுாப்பில்லாத சூழல் உள்ளது என்றும் குற்றம் சுமத்தியுள்ளதோடு, தவெகவினரிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டியதுள்ளது. சிங்கப்பெண் அதிரடிப்படை தவெகவினரை கைது செய்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சியில் என்ன நடந்தது அது இந்த ஆட்சியிலும் தொடர்கிறது என்றும், தவெக அரசு ரீல்ஸ் அரசாக உள்ளதாக விமர்சித்துள்ளதோடு, இந்து மாணவர்களுக்கும், இந்துக்களுக்கும் சலுகை வழங்க வேண்டும் எனவும், அரசு அலுவலகங்களில் கிறிஸ்த ஊழியர்கள் நிரம்பி வழிகின்றனர் என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கடுமையாக சாடியுள்ளார்.
English Summary
Arjun Sampath alleges that the Hindu religion continues to be disrespected under the TVK government