திமுக 20 தொகுதி..கூட்டணி கட்சிகளுக்கு 10 தொகுதி..எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா உறுதி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்றும்  கூட்டணி கட்சிகளுக்கு 10 தொகுதி ஒதுக்கப்படும் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா உறுதியாக கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில உருளையன்பேட்டை தொகுதியின், திராவிட முன்னேற்றக் கழக “செயல் வீரர்கள்” மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கூட்டம்  நேற்று தென்றல் ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தொகுதி அதைத் தலைவர் திரு. ஆதிநாராயணன் தலைமை தாங்கினார், தொகுதி செயலாளர் திரு. சக்திவேல் வரவேற்றார், தொகுதி பொறுப்பாளரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான திரு. எஸ். கோபால் அவர்கள் முன்னிலை வகித்தார், இந்நிகழ்ச்சிக்கு மாநிலக் கழக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான  திருமிகு. இரா. சிவா அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, கழக வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்கினார். அவைத்தலைவர் திரு. எஸ்.பி சிவகுமார், மாநில கழக துணை அமைப்பாளர்கள் திரு. அனிபால் கென்னடி MLA, திரு.தைரியநாதன், மாநில கழக பொருளாளர் திரு.செந்தில்குமார் MLA, மாநில இளைஞர் அணி அமைப்பாளர் திரு. சம்பத் MLA, செயற்குழு உறுப்பினர் திரு. பூ.மூர்த்தி Ex MLA, பொதுக்குழு உறுப்பினர் திரு. வே. மாறன், மாநில மாணவரணி அமைப்பாளர் திரு. எஸ்.பி. மணிமாறன் தொகுதி கழக மாநில பிரதிநிதி திரு.பொன்னுசாமி, மாநில மகளிர் அணி அமைப்பாளர் திருமதி. காயத்திரி ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். 

இதில் தொகுதி கழக நிர்வாகிகள்,  தொகுதியில் உள்ள மாநில அணிகளின் நிர்வாகிகள், மற்றும் உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள கிளைக்கழக நிர்வாகிகள்  மற்றும் உருளையன்பேட்டை தொகுதியில் உள்ள கழக செயல் வீரர்கள் என அனைவரும் திரளாக பங்கேற்று 2026 தேர்தலில் உருளையன்பேட்டையில் கழக வேட்பாளர் திரு. எஸ். கோபால் அவர்களின் வெற்றிக்கான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பகிர்ந்தனர். 

இக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சுமுகமான முறையில் தேர்தல் பயணத்தை மேற்கொள்வது, தொகுதிவாரியாக, கிளைவாரியாக மக்களை நேரில் சந்தித்து கழகத்தின் கொள்கைகளை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டைப் போல புதுவையிலும்  திராவிட  மாடல்  ஆட்சியை கொண்டுவருவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கலந்தாலோசனை கூட்டம் நிறைவில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது.


இதில்  மாநில கழக அமைப்பாளர் இரா.சிவா அவர்கள் பேசியதாவது:உருளையன்பேட்டை தொகுதியில் கிளை நிர்வாகிகள் கூட்டத்தை நான் நடத்தினால்கூட அனைத்து கிளைகளில் இருந்தும் ஒருவர் கூட விடாமல் வந்திருப்பார்களா? என தெரியவில்லை. ஆனால் தொகுதி பொறுப்பாளர் கோபால் கூட்டிய கூட்டத்தில் அனைத்து கிளை நிர்வாகிகளும் வந்துள்ளீர்கள். தேர்தல், தொகுதி மற்றும் கழக வளர்ச்சி தொடர்பாக ஆலோசிக்க இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. 

கிளைக்கழகங்களிலும் அனைத்து அணிகளுக்கும் நிர்வாகிகளை போட வேண்டும் என்று தளபதி உத்தரவிட்டுள்ளார். மாணவர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி என ஒவ்வொரு அணிக்கும் கிளைக் கழகத்திலும் 7 பேரை நியமிக்க வேண்டும். செயல்படாத கிளை செயலாளர்கள் இருக்க கூடாது. ஒவ்வொரு கிளை செயலாளரும் மக்களுக்கு உண்மையாக அர்ப்பணித்து செயல்பட வேண்டும். தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை அறிந்து இருக்க வேண்டும், எதிராளி என்ன பணி செய்கின்றார் என்பதை அறிந்து அவர்களுக்கு முன்பாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு கிளைக் கழக செயலாளர்களும் எம்.எல்.ஏ. போல் செயல்பட வேண்டும். 

ஒவ்வொரு கிளையிலும் 5 புதிய குடும்பத்தினரையாவது கட்சி புதிய உறுப்பினராக சேர்க்க வேண்டும். கழகத்தில் இருந்து ஓடிப் போனவர்களை கொண்டுவந்து சேர்க்க கூடாது. தற்போது படித்த பிள்ளைகள் தமிழகத்தில் தளபதியார் செயல்படும் விதத்தை பார்த்து திமுக மீது அபிப்ராயம் கொண்டுள்ளனர். அவர்களிடம் கழக கொள்கையை எடுத்து கூறி கழகத்திற்கு அழைத்து வரவேண்டும். 

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகி, வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அதுபோல் பல்வேறு அடிப்படை வசதிகளும் பெருகியுள்ளது. பெண்களுக்கு இலவச பேருந்து உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் ஆதரவு இன்றி இவ்வளவு திட்டங்களையும் தமிழக அரசு செய்கிறது. தமிழகத்தில் இலவச கல்வி என்றால் அது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் மாணவர்கள் வட்டிக்கு கடன் பெற்று படிக்கின்றனர். கடைசியில் அரசு தரும் பணத்தை வட்டி கட்டவே போதவில்லை. 
புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி இருந்தும் எந்த வளர்ச்சியும் இல்லை. இலவச அரிசி டெண்டரில் முறைகேடும், ஊழலும் நடந்துள்ளது. அந்த டெண்டரை கைவிட்டு, வேறு டெண்டரை அரசு விட வேண்டும். இல்லையெனில் திமுக 18ம் தேதி போராட்டம் நடத்தும். தேர்தல் காலமன 7 மாதங்களும் திடீர், திடீரென போராட்டங்கள் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். 5 அல்லது 10 மணிநேரத்திற்குள் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டாலும் கழகத்தினர் ஒன்று திரண்டு கலந்து கொள்ள வேண்டும். புதுச்சேரி முழுக்க கழகத்தினர் வந்திருந்து கலந்து கொண்டாலும், உருளையன்பேட்டை தொகுதி கழகத்தினரை பார்த்தால்தான் எனக்கு திருப்தி அளிக்கும். எனவே உருளையன்பேட்டை தொகுதி கழகத்தினர் முன்னின்று கழக போராட்டங்களில் கலந்து  கொள்ள வேண்டும். 

முறைகேடு செய்யாமல் அரிசி வாங்கி வழங்கினால் 10 கிலோவிற்கு பதிலாக 15 கிலோ அரிசி தரலாம். பத்திரப்பதிவிலும் மோசடி நடைபெறுகிறது. ஆட்சியாளர்களுக்கு வேண்டப்பட்டவர்களின் மனைகளின் விலை உயர வேண்டும், அந்த மனைகளுக்கு வங்கிகளில் கடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக நில வழிகாட்டி மதிப்பை உயர்த்துகின்றனர். வில்லியனூரில் இருந்து 2 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள சேந்தநத்தம் கிராமத்தில் ஒரு சதுர அடி ரூ.300 முதல் ரூ.400 வரைதான் போகும். ஆனால் அங்கு நில வழிகாட்டி மதிப்பை ரூ.1600 என நிர்ணயிக்கின்றனர்.

முன்புபோல் போராட்டம் மட்டும் நடத்தப்படாது. அரசின் தவறுகளை எதிர்த்து நீதிமன்றமும் செல்வோம். உள்ளாட்சி தேர்தலில் நடைபெற இருந்த முறைகேடை கண்டித்து நீதிமன்றம் சென்று மகளிருக்கும், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு பெற்று கொடுத்தோம். தேர்தல் நடத்தியிருந்தால் 5 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றி இருக்கும். ஆனால் ந¤யமன எம்.எல்.ஏ., உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்தாலும் ஆட்சியாளர்கள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வரவில்லை. 

ஆட்சியாளர்களுக்கும், ஆளுநருக்கும் முரண்பாடு உள்ளது. அதனால் எந்த கோப்பிற்கும் ஆளுநர் அனுமதி தருவதில்லை. ஒருவர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் என்பார், பஸ் நிலையம் கட்டுவது, அண்ணா திடல் கட்டுவது ஆகிய திட்டங்களில் ஊழல் என்பார். அதன்பின்னர் காணாமல் போய்விடுவார். 

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து  வேண்டும் என்று 16 முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கு எந்த கோப்பும் ஆளுநர் மூலமாகத்தான் செல்லும். ஆனால் சட்டசபையில் நிறைவேற்றிய மாநில அந்தஸ்து தீர்மானங்களை ஆளுநர் அனுப்பாமலேயே வைத்து கொண்டார். இதனை அறிந்து திமுக போராட்டம் நடத்தியது. அதன்பின்னரே தீர்மானம் மத்திய அரசுக்கு சென்றது. முதல்வர் மாநில அந்தஸ்து கேட்பார். ஆனால் தட்டாஞ்சாவடியை தாண்டி எங்கும் செல்ல மாட்டார். பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சென்று சந்திக்க மாட்டார். டெல்லி சென்று கதவை தட்டினால்தானே கிடைக்கும். 

வில்லியனூர் தொகுதியில் கடந்த முறை முதல் முதலில் நின்றேன். எனக்கு பழக்கமில்லாத தொகுதி. என்னை தேர்ந்தெடுத்தவுடன் வில்லியனூர் தொகுதி முழுக்க சேவை செய்து வருகின்றேன். பொது வாழ்க்கையில் மக்களின் நம்பிக்கை பெறுவது மிக முக்கியம். அதை உருளையன்பேட்டை தொகுதியில் கோபால் சிறப்பாக மக்கள் சேவை செய்து நம்பிக்கை பெற்றுள்ளார். தொழிலுக்கு முறையாக வருமான வரி கட்டி, ஜிஎஸ்டி செலுத்தி வருகின்றார். கோபாலுக்கு பொய் பேச தெரியாது. வேறு யாரையாவது நான் நிறுத்தி இருந்தால் தனியார் கம்பெனியுடன் அவரும் சேர்ந்து வேறுமாதிரி வேலை பார்த்து இருப்பார்கள். ஆனால் கோபால் நான் எப்படி விட்டுவிட்டு போனேனோ அதே மாதிரி உருளையன்பேட்டை தொகுதியை வைத்துள்ளார். 
தமிழகத்தில் வளர்ச்சியை கொண்டுவரும், மொழி, இனம் காக்கும் திராவிட மாடல் ஆட்சியை புதுச்சேரியிலும் கொண்டுவர வேண்டும். புதுச்சேரியில் முன்பு 4, 5 இடத்தில் மட்டும் பெண்கள் டான்ஸ் நடைபெற்றது. இந்த ஆட்சியில் 423 ரெஸ்டோ பார்கள் அனுமதி கொடுக்கப்பட்டு அங்கெல்லாம் மெல்லிசை நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஒரே ஒரு தொழிற்சாலை கூட வரவில்லை. 

வில்லியனூரில் எனக்கு சீட் இல்லாமல் போனாலும், உருளையன்பேட்டையில் கோபாலுக்கு சீட் கேட்டு பெறுவேன். பாஜகவில் 100 பேர் சேர்ந்து கார்ப்ரேட் அலுவலகம் அமைத்து  கட்சியை நடத்துகின்றனர். திமுக அப்படியில்லை, மக்களோடு மக்களாக இணைந்து செயல்படுகிறது. மக்களுக்கு தேவையானதை பெற்று கொடுத்தால்தான் வெற்றி பெற முடியும். 

2026 தேர்தலில் 20 தொகுதிகளை கேட்டுப் பெற முடிவு செய்துள்ளோம். கூட்டணி கட்சிகளுக்கு 10 தொகுதிகளை தர உள்ளோம். கட்சி வளர்ச்சிக்காக இந்த தொகுதியில் நாங்கள் போட்டியிடுவோம் என்று கூட்டணி கட்சியினர் பேசுவர். அது அவர்களது உரிமை. அதற்காக அவர்களிடம் சங்கடப்பட்டு நிற்காதீர்கள். கூட்டணி கட்சியினரை தற்போது உதாசீனப்படுத்திவிட்டு தேர்தல் நேரத்தில் சென்று நிற்காதீர்கள். அவர்களிடம் தற்போதில் இருந்தே தொடர்பில் இருங்கள். 

கடந்த முறை தேர்தல் நெருக்கத்தில் 10 நாளில் தொகுதி முழுவதும் சென்று கோபாலால் ஓட்டு கேட்க முடியவில்லை. ஆனால் இந்த முறை அவ்வாறு இல்லை, தொடர்ந்து அவர் கட்சிப்பணி ஆற்றி வருகின்றார். திமுக கொள்கை பிடித்தவர்களை கட்சிக்குள் கொண்டு வாருங்கள். உருளையன்பேட்டை தொகுதி மக்களுக்கு சேவை செய்ய கூடிய அடிமையாக கோபால் கிடைத்துள்ளார். அவரை பயன்படுத்தி கொள்ள வேண்டும். 
மாநில அந்தஸ்து தொடர்பாக ஒரு கருத்தரங்கம் நடத்த உள்ளோம். மேலும் மாணவர்களுக்காக ஒரு நிகழ்ச்சியும் நடத்த உள்ளோம். அத்துடன் சின்னவரை (உதயநிதி ஸ்டாலின்) அழைத்து ஒரு நிகழ்ச்சியும் நடத்த உள்ளோம். இனி கட்சிப்பணி படு பிஸியாகத்தான் இருக்கும். அனைவரும் சிறப்பாக பணியாற்றி 2026ல் கழக ஆட்சியை புதுச்சேரியில் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK 20 constituencies Alliance parties 10 constituencies Opposition leader Ra Siva confirmed


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->