மருத்துவர்களுக்கு உதவ விபரீத முயற்சி...! கடித்த பாம்பை பிளாஸ்டிக் பாட்டிலில் பிடித்து வந்து சிகிச்சைக்குப் பெற்ற இளைஞர்...!
desperate attempt help doctors young man caught snake bite plastic bottle and received treatment
சென்னையில் பாம்பு கடித்த இளைஞர் ஒருவர், தனக்கு கடித்த பாம்பு எந்த வகையைச் சேர்ந்தது என்பதை மருத்துவர்கள் எளிதில் அடையாளம் காண வேண்டும் என்பதற்காக, அதே பாம்பை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து மருத்துவமனைக்கு கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் மையூர் சாகீக் (36). இவர் இன்று காலை தனது வீட்டில் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது மரப்பலகையின் அடியில் மறைந்திருந்த சிறிய பாம்பு ஒன்று திடீரென வெளியே வந்து அவரது கையில் கடித்தது.பாம்பு கடித்ததால் அதிர்ச்சியடைந்தாலும், மையூர் சாகீக் பதற்றத்தில் செய்வதறியாமல் நிற்கவில்லை. மாறாக, தனக்கு கடித்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் அடைத்தார்.
பின்னர் அந்த பாட்டிலுடன் நேராக தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். கையில் பாம்பு அடைக்கப்பட்ட பாட்டிலுடன் அவர் மருத்துவமனைக்குள் வந்ததை பார்த்த சக நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து, மருத்துவர்களிடம் பாம்பை காண்பித்த அவர், தனக்கு எந்த வகையான பாம்பு கடித்தது என்பதை தெரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வசதியாகவே பாம்பை பத்திரமாக கொண்டு வந்ததாக தெரிவித்தார்.மையூர் சாகீக் கொண்டு வந்த பாம்பை மருத்துவர்கள் ஆய்வு செய்தனர்.
இதில், அது விஷத்தன்மை இல்லாத சாதாரண பாம்பு என்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து, இளைஞருக்கு தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், உரிய தடுப்பூசியும் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.பாம்பு கடித்த நிலையில், தனக்கு கடித்த பாம்பையே பாட்டிலில் அடைத்து மருத்துவமனைக்கு இளைஞர் ஒருவர் கொண்டு வந்த சம்பவம் தாம்பரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
desperate attempt help doctors young man caught snake bite plastic bottle and received treatment