சாப்பாடு கொடுக்கச் சென்ற மகள்… மதுபோதையில் தந்தையின் கொடூர தாக்குதல்...! தாய், மகள் பலி...!
Daughter who went give food brutally attacked by drunken father Mother and daughter killed
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறு விபரீதமாகி, தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற சமையல் மாஸ்டரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே அதிகாரப்பட்டி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ், 45. ஓட்டலில் சமையல் மாஸ்டராக பணியாற்றி வரும் இவரது மனைவி ஷாலினி. இவர்களது மகள் சின்மயி, 19. தனியார் கல்லூரியில் முதலாமாண்டு செவிலியர் படிப்பு படித்து வந்தார்.கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனால் சின்மயி தனது பாட்டி உமாராணி, 60, உடன் வசித்து வந்தார்.

சுரேஷ் தனியாக வேறு வீட்டில் வசித்து வந்தார். ஷாலினி சேலத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி வேலை செய்து வந்ததால், அவ்வப்போது சொந்த ஊருக்கு வந்து மகளை பார்த்துச் செல்வது வழக்கம்.இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு சின்மயி தனது தந்தை சுரேஷுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அப்போது மதுபோதையில் இருந்த சுரேஷ், சின்மயியிடம் யாருடன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் எனக் கேட்டதாக தெரிகிறது.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சின்மயி தனது தந்தையை நோக்கி, குடும்பப் பிரச்சினை குறித்து ஆவேசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதில் கடும் ஆத்திரமடைந்த சுரேஷ், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மகளை சரமாரியாக வெட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.மகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பாட்டி உமாராணி, சின்மயியை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் சுரேஷ் அரிவாளால் தாக்கியுள்ளார்.
கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த உமாராணி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சின்மயியை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஏ.பள்ளிப்பட்டி காவலர்கள், உமாராணியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பியோட முயன்ற சுரேஷை காவலர்கள் கைது செய்தனர்.மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சின்மயி, நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டியும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இரட்டை கொலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், ஏ.பள்ளிப்பட்டி காவல் ஆய்வாளர் வான்மதி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவலர்கள், கொலைக்கான முழுமையான காரணம், சம்பவத்தின் பின்னணி உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு இரட்டை கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Daughter who went give food brutally attacked by drunken father Mother and daughter killed