சிஎஸ்கேவின் 25% பங்குகளை தோனி கேட்டாரா? வைரலான தகவலுக்கு சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்! - Seithipunal
Seithipunal


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 25 சதவீத பங்குகளை முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே சிஎஸ்கே அணி தொடர்பாக பல்வேறு செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. முதலில் சிவம் துபே, கலீல் அஹ்மத் ஆகியோரை கொடுத்துவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதன்பின்னர் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் பதவி விலகியதாகவும் கூறப்பட்டது.

ஆனால், ஃபிளமிங் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க முடிவு செய்ததன் காரணமாகவே சிஎஸ்கேவில் இருந்து விலகியதாக பின்னர் தகவல்கள் வெளியாகின. இதற்கிடையே சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோர் சிஎஸ்கே முகாமில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் பரவின. இதனை சிஎஸ்கே நிர்வாகம் மறுத்தது. இந்த நிலையில், தோனி தொடர்பான தகவல் பரவியது.

சிஎஸ்கே அணியின் 25 சதவீத பங்குகளை தோனி வாங்க விரும்பியதாகவும், அதற்கு அணி நிர்வாகம் 4 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்ததாகவும் முதலில் கூறப்பட்டது. பின்னர் தோனி 18.5 சதவீத பங்குகளை கேட்டதாகவும், சிஎஸ்கே நிர்வாகம் அதிகபட்சமாக 5.5 சதவீதம் மட்டுமே வழங்க தயாராக இருப்பதாகவும் வெவ்வேறு தகவல்கள் வெளியாகின. இதனால் சிஎஸ்கே நிர்வாகத்துக்கும் தோனிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில், இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். தோனி சிஎஸ்கே அணியின் பங்குகளை கேட்டதாக வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது தோனி மட்டுமே எடுக்க வேண்டிய முடிவு என்றும் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். அதேநேரத்தில், அடுத்த சீசனில் விளையாட மாட்டேன் என தோனி இதுவரை தங்களிடம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தோனி ஏற்கனவே 45 வயதை எட்டியுள்ள நிலையில், கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. இதனால் அடுத்த சீசனில் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

எனினும், தோனி ஓய்வு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் அறிவிக்காத நிலையில், சிஎஸ்கே அணியின் பங்குகள் தொடர்பாக பரவி வரும் தகவல்கள் வெறும் வதந்தி என அணி நிர்வாகம் விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Did Dhoni ask for a 25 stake in CSK CEO Kasi Viswanathan clarifies the viral report


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->