அரச அலுவலகங்களில் தீபாவளி பண்டிகை சிறப்பு வசூல் வேட்டை: மௌனம் காக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை..?
Collection drive in government offices ahead of Diwali festival
பண்டிகை காலங்களில், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை, ஒப்பந்ததாரர்கள், அரசியல் பிரமுகர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். இவர்கள் தங்களிடம் வரும் பொதுமக்களிடம், பண்டிகை கால செலவிற்கு லஞ்சம் பெறுவதையும், சில துறை அதிகாரிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை, வரும், 20-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை அதிகரித்து வருகிறது. ஆனால், லஞ்ச ஒழிப்பு துறையினர் அமைதி காத்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, நெடுஞ்சாலை, நீர்வளம் உள்ளிட்ட பல துறைகள் வாயிலாக, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சமீபத்தில் டெண்டர் விடப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுதவிர பல பணிகளுக்கு ஒப்பந்ததாரர் தேர்வும் நடக்கவுள்ளது.

இதையடுத்து, தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை கவனிக்கும் பணிகளை ஒப்பந்ததாரர்கள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தலைமை செயலகம், எழிலகம், நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் அரசு அலுவலகங்கள் களைகட்டி வருகின்றதாக புகார்கள் எழுந்துள்ளன.
அத்துடன், பல்வேறு மாவட்ட தலைநகரங்களில் உள்ள அலுவலகங்களிலும், ஒப்பந்த நிறுவனங்கள், அரசியல்வாதிகள் கவனிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தீபாவளி பண்டிகை காலத்தில் பொருட்கள் நடமாட்டம், தேசிய நெடுஞ்சாலைகள், மாவட்ட நெடுஞ்சாலைகளில் அதிகரித்துள்ளது. அங்குள்ள சோதனை சாவடிகளில் வணிகவரி துறையினர் மற்றும் சோதனைச் சாவடி போலீசாரின் வசூல் வேட்டை நடத்திவருகின்றனர். தங்கள் பங்கிற்கு போக்குவரத்து போலீசாரும் வாகனங்களை மடக்கி கைநீட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதில், இனிப்பு, காரம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, சாக்லெட், உடைகள், பணம், பரிசுப் பொருட்கள் என, விதவிதமாக வசூல்களை கட்டுகிறதாகவும், உங்களுடன் ஸ்டாலின் முகாம் வாயிலாக, பட்டா, நிலம் மாற்றம், புதிய சிறுதொழில் நிறுவனங்கள், வீட்டு மின் இணைப்பு என, வருவாய் மற்றும் மின்வாரியம் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதனையடுத்து, காரியங்களை சாதித்துக்கொள்ள துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை, பொதுமக்கள் அணுக தொடங்கியுள்ளனர். அவர்களிடம் கோரிக்கையின் தன்மைக்கேற்ப, வசூல் வேட்டை நடந்து வருவதாக தெரியவருகிறது. இவ்வாறான பெரிய பண்டிகை காலங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், ஆங்காங்கே அரசு அலுவலகங்களில் சோதனை நடத்துவர். இந்த ஆண்டு சோதனை நடத்தாமல், மௌனம் காத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதாவது, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், லஞ்சம் தொடர்பான பிரச்னைகள் வெளியே தெரியாமல் இருக்க, லஞ்ச ஒழிப்பு துறையினர் அடக்கி வாசித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே இருப்பதால், அன்பளிப்பு, பரிசு பொருட்கள் என்ற பெயரில், லஞ்ச வேட்டை நடக்கிறதாகவும்,
இதை கண்காணிக்க, லஞ்ச ஒழிப்பு துறையில் உளவு போலீசார் உள்ளனர். அவர்களுக்கு லஞ்ச வேட்டை நடப்பது தெரியும் என்றும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆனால், அவர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல் உள்ளதாஜிதாவும், அத்துடன் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை தொடர்பு கொண்டு, அவர்கள் வசூல் வேட்டை நடத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
English Summary
Collection drive in government offices ahead of Diwali festival