நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்குதல் சம்பவம் - முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்.!
chief minister stalin tweet about nanguneri school student attack issue
நாங்குநேரி பள்ளி மாணவர் தாக்குதல் சம்பவம் - முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் பள்ளி மாணவர்களுக்கு இடையே சாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்சனையில் ஆத்திரமடைந்த மாணவர்கள் சக மாணவரை வீட்டிற்குள் நுழைந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் 2 சிறார்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நாங்குநேரியில் நடந்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. இளம் மாணவர்களிடம் கூட சாதிய நச்சு எந்தளவுக்கு ஊடுருவி இருக்கிறது என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது.
சக மனிதரை நமக்குச் சமமான ஒருவராக அடையாளம் காணாமல் சாதி வேறுபாடும் மாறுபாடும் பார்த்து வெறுப்பதும், அத்தகைய வெறுப்பை வன்முறையாக வெளிப்படுத்துவதும் இன்னும் தொடர்வது சகிக்க முடியாததாக இருக்கிறது.
இந்தச் சம்பவத்தில் கொடூரமாகத் தாக்கப்பட்ட மாணவர்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை ஏற்க இருப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார். குற்றச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்.
அதே நேரத்தில் மாணவர்கள் மனதில் சமூக நல்லுறவை விதைப்பதை அனைவரும் கடமையாகக் கொள்வோம். குறிப்பாக ஆசிரியர் சமூகமானது, இது போன்ற நன்னெறிகளை ஊட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். வெறுப்பு மனம் கொண்டவர்களால் எந்த வெற்றியையும் அடைய முடியாது.
பேசும் மொழியால் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள்! நமக்குள் வெறுப்புணர்வும் ஏற்றத் தாழ்வு எண்ணமும் கூடாது என்பதை இளைய சமுதாயம் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
chief minister stalin tweet about nanguneri school student attack issue