எனக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வேண்டும் - வாலிபரை பாராட்டிய உயர்நீதிமன்றம்.!
chennai high court wishes to youth
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்கக் கோரி திருப்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆகவே, எனக்கு சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ”சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க மாவட்ட தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை. பட்டியலில் உள்ள குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை மட்டுமே வழங்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் கேட்டுள்ள மனுதாரரின் விருப்பம் பாராட்டுக்குரியது.
அதே சமயம் இதுபோன்ற சான்றிதழ்களை வழங்கினால் சில பிரச்சனைகளும் ஏற்படும். இதுபோன்ற சான்றிதழை வழங்குவது சொத்து, வாரிசுரிமை மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்கான தனிப்பட்ட சட்டங்களைப் பயன்படுத்துவதில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
அரசு உத்தரவுப்படி, கல்வி நிலையங்களின் விண்ணப்பங்களில், சாதி – மதம் தொடர்பான அந்த இடத்தை பூர்த்தி செய்யாமல், அப்படியே விட்டு விடலாம். அதற்கான உரிமை உள்ளது. அதை அதிகாரிகள் யாரும் கேள்வி எழுப்ப முடியாது. எனவே சாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் வழங்க வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு உத்தரவிட முடியாது” என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
English Summary
chennai high court wishes to youth