விசாரணைக்காக அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!!
chennai high court order not violation of human rights calling police station for inquiry
சென்னையில் உள்ள கோபாலபுரத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரிடம் மயிலாப்பூரைச் சேர்ந்த விஜயகிருஷ்ணன் தன்னுடைய மாமனாரின் சொத்து பத்திரத்தை அடமானமாக வைத்து 6 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த சொத்து பத்திரத்தை வேணுகோபால் திருடிவிட்டதாக புளியந்தோப்பு காவல்நிலையத்தில் விஜயகிருஷ்ணன் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி வேணுகோபாலுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இதையடுத்து வேணுகோபால் விசாரணைக்கு ஆஜரானபோது அவரிடம் சொத்து பத்திரங்களை விஜயகிருஷ்ணனிடம் கொடுக்கும்படி காவல்துறையினர் தன்னை மிரட்டியதாக கூறி புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர் ஷகிபா ஆகியோருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணையம், ஆய்வாளர் ரவி மற்றும் உதவி ஆய்வாளர் ஷகிபா ஆகியோருக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்ததுடன், இருவருக்கும் எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து காவல் ஆய்வாளர் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைப்பது மனித உரிமை மீறல் ஆகாது.
விசாரணையின்போது புகார்தாரரான வேணுகோபால் துன்புறுத்தப்பட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை புளியந்தோப்பு காவல் ஆய்வாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவு மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
English Summary
chennai high court order not violation of human rights calling police station for inquiry