சென்னையில் பரபரப்பை ஏற்படுத்திய அமோனியம் நைட்ரேட் என்ன ஆனது?! வெளியான தகவல்!
CHENNAI AMMONIUM NITRATE
கடந்த வாரம் லெபனான் நாட்டின் உள்ள பெய்ரூட் துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,250 டன் அமோனியம் நைட்ரேட் எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அந்த நாட்டின் தலைநகரான பெய்ரூட் நகரமே உருக்குலைந்து போனது. இந்த விபத்தில் தற்போதுவரை 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
லெபனானில் ஏற்பட்ட வெடி விபத்திற்கு காரணமான அமோனியம் நைட்ரேட் சென்னையிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, கடந்த 2015 ஆம் ஆண்டு கரூர் அம்மன் கெமிக்கல் நிறுவனம் என்ற தனியார் நிறுவனம் உரிய அனுமதியின்றி இறக்குமதி செய்ததாக 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் 37 கன்டெய்னர்களில் மணலியில் உள்ள வேதிக்கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன் சுங்கத்துறை தெரிவித்தது.
இதற்கிடையே, சுங்கத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கும் இடத்தினை ஆய்வு செய்து, அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதாகவும், அடுத்த 3 நாள்களில் இதனை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுங்கத் துறை உறுதி அளித்தது.
இந்நிலையில், ஹைதராபாத் நிறுவனம் ஒன்று 10 கன்டெய்னர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும், மொத்தமுள்ள 37 கண்டெய்னர்களில் 10 கண்டெய்னர்கள் நாளை ஹைதராபாத்க்கு பாதுகாப்புகாக எடுத்து செல்ல பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.