சுதந்திர தின விழாவில் சோகம்...! வாத்திய இசைக்குழுவில் பங்கேற்ற காவலர் மயங்கி விழுந்து பலி...!
celebrations policeman participating orchestra fainted and died in Independence Day
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இசைக்குழுவில் பங்கேற்ற காவலர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழா நிகழ்ச்சிகளின்போது தமிழ்நாடு காவல்துறையின் இசைக்குழுவினர் தேசபக்தி பாடல்கள் மற்றும் பாரம்பரிய இசையை இசைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த இசைக்குழுவில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை பயிற்சி மையத்தைச் சேர்ந்த வாத்திய இசைக்காவலர் தர்மராஜ் (53) பங்கேற்று இசைக்கருவியை இசைத்துக் கொண்டிருந்தார். விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலி அதிகரித்த நிலையில், அவர் நிலைதடுமாறி மயங்கி விழுந்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத அங்கிருந்த அதிகாரிகளும், பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சக காவலர்கள் விரைந்து சென்று தர்மராஜை மீட்டு, அங்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த அவசர ஊர்தியில் ஏற்றினர்.அவசர ஊர்தியில் இருந்த மருத்துவப் பணியாளர்கள் தர்மராஜுக்கு உடனடியாக இதய மீட்புச் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட தர்மராஜுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை 3 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.உயிரிழந்த காவலர் தர்மராஜுக்கு ராணிமங்கலவள்ளி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
சுதந்திர தின விழாவில் நாட்டுக்காக இசை நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தர்மராஜின் உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தல் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. சுதந்திர தின விழா பணியில் ஈடுபட்டிருந்த காவலர் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், சக காவலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
celebrations policeman participating orchestra fainted and died in Independence Day