பெரிய சம்பவத்துக்கு ஸ்கெட்சா...? - நெல்லையில் கார், பைக்குகளுடன் பிடிபட்ட 'டாப் 6' ரவுடிகள்...!
bad incident Top 6 rowdies caught cars and bikes Nellai seized
திருநெல்வேலி முன்னீர்பள்ளம் பகுதியில் அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில், அரிவாள்களுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6 பேரை காவலர்கள் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேரன்மகாதேவி உட்கோட்டத்திற்கு உட்பட்ட முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லையில் இன்று அதிகாலை காவலர்கள் வழக்கமான ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய கும்பலை கண்ட காவலர்கள், உடனடியாக அவர்களை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில், 19 வழக்குகளில் தொடர்புடைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியான மணிகண்டன் என்ற வாத்துமணி (27), 18 வழக்குகளில் தொடர்புடைய காளிமுத்து (23), 11 வழக்குகளில் தொடர்புடைய பொன்ரங்கம் என்ற பொன்ராஜ் (19), மேலும் சுடலை கிருஷ்ணன் என்ற முருகன் (40), இசக்கிமுத்து என்ற இயேசுராஜா (29) மற்றும் மகாராஜன் (18) ஆகியோர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது நடவடிக்கையின் போது, பொன்ரங்கம் என்ற பொன்ராஜ் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அந்த முயற்சியில் கீழே விழுந்ததில் அவரது வலது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையின்போது, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 அரிவாள்கள், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவர்கள் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களா என்பதையும் காவலர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
bad incident Top 6 rowdies caught cars and bikes Nellai seized